Thursday 27 August 2015

(39) இலக்கிய விசாரங்கள் - க. நா. சு கட்டுரைகள் - 1

தொகுப்பாசிரியர் : காவ்யா சண்முகசுந்தரம்

" நடேச சாஸ்திரி தன‌து தீனதயாளு தான் தமிழில் முதல் நாவல் என்று கூறுகிறார். மற்ற முயற்சிகள் பற்றி அவருக்கு தெரியவே தெரியாதோ அல்லது தெரிந்திருக்கும் அதெல்லாம் அப்படியொன்றும் முக்கியமானவை அல்ல என்று எண்ணி இப்படி எழுதியிருப்பாரோ."

 இப்போது உள்ள வேலைப்பளு கூடிய நிலையில் 896 பக்கங்கள் உடைய இந்த புத்தகத்தை வாசித்து முடிப்பேனா என்ற சந்தேகத்தோடு தட்டிய போது மேற்சொன்ன வரியை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அவ்வரி ஒரு விதமான கவர்ச்சியை தந்ததால் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன். நிச்சயமாக பயனுள்ள புத்தகம் தான். தமிழின் முதல் ஐந்து நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவற்றை வாசித்தபோது கட்டாயம் அந்த நாவல்களைப் படிக்க வேண்டும் என்று குறித்துக்கொண்டேன்.

அவரது கட்டுரைகள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை. இப்புத்தகத்தில் 25 தமிழ் நாவல்கள் , 11 இந்திய நாவல்கள், 63 உலக நாவல்கள் பற்றி க. நா. சு எழுதியவை இடம்பெற்றுள்ளன.  படித்திருக்கிறீர்களா? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளும் இதில் உள்ளடக்கம்.

தமிழின் முதல் 5 நாவல்களான வேத நாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் , ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் , அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் , ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளு  தி.ம.பொன்னுசாமிப்பிள்ளையின் கமலாஷி என்பவற்றை பற்றி சற்று விரிவாகவே எழுதியுள்ளார்.  சிரித்துக்கொண்டே வாசிக்க  வைக்கும் எழுத்து நடை க. நா.சு உடையது. இவரது நாவல்களும் இப்படித்தான் இருக்குமோ என்னவோ. இவை தவிர 20 தமிழ்ப் புத்தகங்கள் பற்றி இவர் எழுதியவையும் இருக்கின்றன.

சுந்தரி - வ.ரா
அணையாவிளக்கு - ஆர்வி
மேனகா - வடுவூர் துரைசாமி ஐயங்கார்
கேட்ட வரம் - அநுத்தமா
ராஜாம்பாள் - ஜே.ஆர் .ரங்கராஜு
சிநேகிதி - அகிலன்
பொய்த்தேவு - க. நா.சுப்ரமணியம்
இதய நாதம் - ந.சிதம்பர சுப்ரமணியம்
மண்ணாசை - சங்கரராம்
கரித்துண்டு - மு.வரதராசன்
நாகம்மாள் - ஆர்.சண்முக சுந்தரம்
ஜடாவல்லவர் - அ.சுப்ரமணிய பாரதி
சத்தியமேவ - கிருத்திகா
நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராமன்
பெண் இனம் - சங்கரராம்
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்
புத்ர - லா.ச.ரா
மோகமுள் - தி.ஜானகிராமன்
நைவேத்யம் - பூமணி

இந்திய நாவல்களில் பஷீரின்  உப்பப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது , சிவராம் காரந்த்தின் மண்ணும் மனிதர்களும் உட்பட 11 நாவல்களைப் பற்றி எழுதியுள்ளார். உலக நாவல்கள் வரிசையில் 63 நாவல்களைப்பற்றி எழுதியுள்ளார். 

No comments:

Post a Comment