Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Wednesday, 9 March 2016

(51) அம்மாவுக்கு ஒரு நாள் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் 27 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. 1950 - 60 இல் எழுதப்பட்டவை.

அம்மா படம் பார்க்க செல்லவேண்டும் என ரகுவை அன்று வேளைக்கு வீட்டுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறார். அந்தப் படத்தில் நீ பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை எனக் கூறி வேலைக்கு கிளம்பும் ரகு பின் சீக்கிரமாக வீட்டுக்கு போக நினைத்தும் முடியாமல்ப் போய்விடுகிறது. ரயில் தாமதமாகி விட பஸ்ஸில் போக பணமில்லாமல் தவிக்கிறான். வீட்டிற்கு தாமதமாகவே வருகிறான். " நீ சினிமாவுக்கு போகவில்லையா?" என அர்த்தமில்லாமல் கேள்வி கேட்கிறான். அம்மாவுக்கு கோவித்துக் கொள்ளவே தெரியாது. தனக்கு ஏன் சீக்கிரம் வரமுடியவில்லை என்பதை சொல்வதால் பயன் ஒன்றும் இல்லை என சொல்லாமலே விட்டுவிடுகிறான்.
 - அம்மாவுக்கு ஒரு நாள் சிறுகதை




அனைத்துமே படிக்க வேண்டிய சிறுகதைகள்.

Friday, 11 July 2014

(18) தண்ணீர் - அசோகமித்திரன்

 தண்ணீர் - அசோகமித்திரன்

தண்ணீருக்காக மக்கள் படும் அவலத்தை பற்றி பேசிய நாவல். நாவல் எழுதி பல வருடங்கள் சென்றாலும் இன்றும் இப்பிரச்சினை மக்களை விட்டு நீங்கவில்லை. வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கவே சாத்தியம் இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை முகம் கொடுக்காதவர்கள் இருப்பார்களா தெரியவில்லை. வாழ் நாளில் ஒரு தடவையாவது தண்ணீருக்காக காத்திருந்த கணங்கள் இல்லாத மனிதர்கள் மிகக்குறைவே. அதுவும் இந்தியா  போன்ற நாடுகளில் நகரங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தண்ணீர் லொறிக்காக  குடத்துடன் காத்திருந்து மக்கள் படும் துன்பம் தமிழ் படங்களில் நகைச்சுவையாகவே காட்டப்படிருந்தாலும்,  அதன் துன்பம் மிக அதிகமே. சென்னை அண்ணாசாலையில் ஒரு தடவை தங்கியிருந்த சமயம், மஞ்சள் நிறத்தில் தண்ணீர் இருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கையில் நீர்ப்பிரச்சினை இந்தியா அளவிற்கு இல்லை என்றாலும், முன்னறிவித்தலுடன் நீர் வெட்டுகள் வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவைகள் இடம்பெறுவதுண்டு.தொடர்மாடிகளில் இருப்பவர்கள் இதனால் பாதிப்படைவது குறைவு என்றாலும் நீர்த்தொட்டி இல்லாத (water tank) தனி வீடுகளில் வசிப்பவர்கள் பாதிப்படைவதுண்டு. பத்து வருடங்களுக்கு முன், எனக்கும்  அவ்வாறான ஒரு அனுபவம் ஏற்பட்டதால் அதன் வலியை என்னால் உணரக்கூடியதாகவே இருக்கிறது.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் இரு பெண்களின் வாழ்க்கையை பற்றி பேசுவதனூடாக  அவ்விடத்தின் தண்ணீர் அவலத்தை பேசுகிறது. ஜமுனா, சாயா எனும் இரு சகோதரிகள் ஒரு வீட்டின் மேற்பகுதியில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.இருவரின் வாழ்க்கையுமே துன்பமானது தான். ஜமுனாவை பாஸ்கர்ராவ் என்பவன் சினிமா ஆசை காட்டி ஏமாற்றுகிறான். சாயாவின் குழந்தை அவர்களது அம்மாவுடன் இருக்கிறது. அம்மாவோ புத்தி சுவாதீனம் உள்ளவர். தனது சொல்லை கேட்கவில்லை என்பதால் பாட்டிக்கும் அவர்களில் வெறுப்பு. அதற்கும் மேல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் பிரச்சினை.  ஜமுனா குடத்துடன் சென்று நீர் எடுத்து வருகிறாள். அது ஒன்றும் அவ்வளவு லேசான காரியம் இல்லை. வீட்டில் குழாய்க்கிணறு அடிக்க அதிலும் துர் நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. "தண்ணி முதல்ல சாக்கடைதண்ணி போல வந்தது. ஆனா அது எல்லாம் சரியாயிடும், தண்ணி வந்தது அதுதான் முக்கியம்" என்று அவர்கள் கதைத்துக்கொள்கிறார்கள். நாவலில் வரும் டீச்சர் அம்மா கதா பாத்திரமும் முக்கியமானது.

குழாய்களில் தண்ணீர் வராதபோது நகராட்சியில் இருந்து வருபவர்கள்  தெருவைக்  அகழ்ந்து போட்டுவிட்டு போவது அதில் கார், லாரி போன்றவை சிக்குவது,  பள்ளம் வெட்டும்போது கழிவு நீர்க்குழாயைச் சேதப்படுத்திவிட்டு செல்வது போன்ற விடயங்கள் நாவலில் மிகையில்லாமல் சொல்லப்பட்டிருக்கிற‌து.

இந் நாவல் தண்ணீர் அவலத்தை பற்றி பேசிய முக்கிய நாவலாக கொள்ளப்படுகிறது.

Tuesday, 21 August 2012

ஒற்றன்

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் அவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாத‌மி விருது பெற்றவர். எளிமையோடு நகைச்சுவைத்தன்மை கொண்டவை இவரது எழுத்துக்கள்.  ஆங்கில இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்தவர். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். கரைந்த நிழல்கள், தண்ணீர், மானசரோவர், பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத்தாமரை , ஒற்றன் என்பன இவரது முக்கிய நாவல்களாகும். சினிமாவின் உண்மைத்தன்மையை சொல்லும்  அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்' என்ற சிறுகதையை எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் சிறந்த படைப்பாக சொல்வதுண்டு.

இவரது 'ஒற்றன்' என்ற பயண நூலை அண்மையில் வாசிக்கும் அனுபவம் கிடைத்தது.1973 இல் அயோவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்கு பல்வேறு நாடுகளிலும் இருந்து முக்கிய எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட‌
அசோகமித்திரன் அதில் கலந்துகொண்டு அங்கு தனக்கு ஏற்பட்ட  அனுபவங்களை ' ஒற்றன்' ஆக தந்துள்ளார்.



பாட்டு பாடுமாறு அவரை  கேட்ட போது  அவர்  தமிழ் எழுத்துக்களை  இராகம் போட்டு பாடி பாராட்டு வாங்கிய‌தை கூறி  சிரிப்பை வர வைக்கிறார்.நல்ல சைவ உணவு இல்லாமல் அவதிப்பட்டது,  பனிக்கட்டியில் காலை வைத்து சறுக்கி விழுந்த‌து, கே‍ மார்ட்டில் சப்பாத்து  வாங்கியது, எதியோப்பியாவில் இருந்து கலந்து கொண்ட அபே குபேக்னா, பெரு நாட்டின் பிராவோ போன்ரவர்களுடனான தன் அனுபவங்கள், யப்பானிய பெண்  கஜூகோவின் கவிதை என்று பல விடயங்களை நகைச்சுவையுடன்  கூறுகிறார். கவிதைத்தொகுப்பு நூல் ஒன்றிற்கு அவர் மொழிபெயர்த்து கொடுத்த அம்மாவின் பொய்கள் என்ற ஞானக்கூத்தனின் கவிதையை விக்டோரியா ஹார்ட்மன் தனது நாடகத்தில் சிறப்பாக பயன்படுத்தியது குறித்து கூறியுள்ளார்.

இன்று போன்ற தொலைத்தொடர்பு வசதிகளோ, பிரயாண வசதிகளோ அற்ற 70 களில் ஒரு எழுத்தாளர் எப்படி அமெரிக்காவை தெரிந்து கொண்டார் என்பதற்கு ஒற்றன் ஒரு சிறந்த ஆவணம்.