Sunday 12 May 2019

(81) குறுகிய வழி - ஆந்த்ரே ழீடு

மொழிபெயர்ப்பு - க. நா.சு

காவ்யா பதிப்பகம் தொகுத்த  க. நா.சு மொழிபெயர்ப்பு நாவல்கள் அடங்கிய தொகுதியில் மொத்தம் 6 நாவல்கள் உள்ளன. விலங்குப் பண்ணை நாவல் தந்த உற்சாகத்தில் அதே எழுத்தாளரின் மற்றொரு நாவலான 1984 வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் கால்ப்பகுதி கூட என்னால் வாசிக்க முடியவில்லை. நாவல் எனக்கு அந்நியமாகவே இருந்தது.அதனால் நிறுத்தி விட்டு ஆந்த்ரே ழீடுவின் 'குறுகிய வழி' நாவலை வாசித்தேன். 

ஜெரோமின் நிறைவேறாக் காதலை சொல்லும் நாவல் என்று மட்டும் தட்டையாக  சொல்ல முடியாது. ஜூலியட்டின் காதலும் கூட நிறைவேறவில்லை. ஜெரோமும் அலிஸாவும் காதலிக்கிறார்கள். ஆனால் அலிஸா ஜெரோமைத் திருமணம் செய்து கொள்வதை விட  மதத்தை தீவிரமாக விரும்புகிறாள். உண்மையான மகிழ்ச்சி என்பது மதத்தில் சொன்னவற்றை பின்பற்றுவதே என எண்ணும் அலிஸா தனது தங்கை ஜெரோமை விரும்புவது தெரிந்து தான் தனது காதலை தியாகம் செய்ய விரும்புகிறாள். ஆனால் தங்கை ஜூலியட் வேறு ஒருவரைத் திருமணம் செய்து தனது காதலைத் தியாகம் செய்கிறாள். நாவலின் இறுதிப் பகுதி அலிஸாவின் நாட்குறிப்புகளினூடாக‌ சொல்லப்படுகிறது.அலிஸா இறந்து 10 வருடங்களின் பின் ஜெரோமும் ஜூலியட்டும் சந்திப்பதில் நாவல் நிறைவடைகிறது. அப்போது ஜூலியட்டுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்து இருக்கிறது. பெண் குழந்தை. பெயர் அலிஸா.

Saturday 11 May 2019

(80) விலங்குப் பண்ணை- George Orwell

தமிழ் மொழிபெயர்ப்பு - க. நா.சு

புரட்சியைக்(ரஷ்ய‌) கிண்டல் செய்து  எழுதப்பட்ட நாவல். க. நா.சு மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. மூல நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது கிடைக்காத இன்பம் க. நா.சு வின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.பல வசனங்களைத் தமிழில் ரசித்து வாசித்து விட்டு, பின் ஆங்கிலத்தில் அவ்வசனங்களை வாசிக்கும் போது  தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை உணர முடிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், நாவலை உயிர்ப்புடன் தமிழில் தந்திருக்கும் க. நா.சு உண்மையிலேயே தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை தான். காவ்யா பதிப்பகம் அவரது படைப்புகளைத் தொகுத்துள்ளது. அவரது விமர்சனங்கள் மூலமே நான் பல நாவல்களை அறிந்திருக்கிறேன்.


திரு. ஜோன்ஸ் இன் பண்ணையிலேயே புரட்சி நடக்கிறது.  கிழ‌ட்டுத்தளபதி என மற்ற மிருகங்களால் அழைக்கப்படும் பன்றி ஒரு நாள் புரட்சி பற்றி தான் கண்ட கனவை மற்ற விலங்குகளுக்கு விளக்கிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது. புரட்சி எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே ஒரு நாள் புரட்சியும் நடந்து விடுகிறது. நெப்போலியன், ஸ்னோபால் ஆகிய இரு பன்றியும் தான் ஏனைய விலங்குகளை வழி நடத்துகிறது.  குதிரைகளான பாக்சர், க்ளோவர், கழுதை பெஞ்சமின், Mollie என்ற தற்பெருமையுடைய குதிரை, ஸ்குவீலர் என்ற பேச்சாற்றல் மிக்க பன்றி(இது கறுப்பையே வெள்ளை என்று தன் பேச்சால் நிரூபித்து விடும்) மோசஸ் என்ற காகம் , கோழிகள் , பூனைகள் என பண்ணையின் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. 


புரட்சியின் பின் ஏழு விதிகளை உருவாக்கும் புரட்சிக்கு தலைமை வகிக்கும் பன்றி நெப்போலியன் இறுதியில் ஒவ்வொன்றாக விதிகளை மீறி வருவதை அழகாக நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'எல்லா மிருகங்களும் சமம்' என்ற விதியை ' எல்லா மிருகங்களும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சமனானவை' என மாற்றிவிட்டது. ஸ்னோபால் பன்றிக்கு துரோகி பட்டம் கொடுத்து பண்ணையை விட்டுத் துரத்திவிடும் நெப்போலியன் பின்னர் நடக்கும் அநீதி முழுவதையும் ஸ்னோபால் தலையிலேயே கட்டிவிட்டுவிடும். இறுதியில் புரட்சியால் எந்த பலனும் கிடைப்பதில்லை. முன்னர் இருந்த நிலையை விட கீழ் நிலைக்கே உழைப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்,புரட்சியாளர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வசனம் பேசி, நியாயப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நாவல் சொல்கிறது.அந்தப் பண்ணையில் நடப்பவற்றை இன்று கூட நாம் அரசியலில், நமது தொழில் புரியும் இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.