Saturday 18 April 2020

(87) கதவு திறந்தே இருக்கிறது - பாவண்ணன்

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பாவண்ணனின் கட்டுரைகள் எனக்கு எப்போதுமே பிடித்தவை. இந்த புத்தகம் பல தடவைகள் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் நினைக்கின்றேன். அவரது எழுத்துகளில் மூழ்கி விட்டதால் ஒவ்வொரு கட்டுரையுமே ஒவ்வொரு புத்தகத்தை, ஆளுமையைப் பற்றியது என்பதை நான் அரைப் புத்தகம் கடந்த பிறகு தான் உணர்ந்து கொண்டேன்.
ஐந்நூறு வண்டிகளின் சத்தம் என்ற கட்டுரை அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த  பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தீகநிகாயம் என்ற புத்தரின் பொன்மொழிகள் என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகத்தைப் பற்றியது. சாலிம் அலியைப் பற்றிய விரிவான கட்டுரை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற புத்தகம் பற்றியது. அவருடன் எப்போதும் உடனிருக்கும் துங்கபத்திரை,ஜோக் நீர்வீழ்ச்சி உட்பட பல நதிகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள காகா கலேல்கரின் ஜீவன் லீலா என்ற புத்தகம் பற்றிய கட்டுரையும் உள்ளது. ஜீவன் லீலா எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். நதிகளை சென்று தரிசிக்க வேண்டும் என்று பாவண்ணனுக்கு தோன்றியது போலவே எனக்கும் ஆசையை வர வைத்த புத்தகம். நூற்றாண்டுக்கு முற்பட்ட தூய நதிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.

புத்தரின் புனித வாக்கு எனும் பால் காரஸ் எழுதிய புத்தகத்தைப் பற்றிய கட்டுரையில் மீண்டும் புத்தரைப் பற்றி எழுதியுள்ளார்.ஹென்றி தோரோ பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானது.அண்மையில் சாகித்ய அக்கடமி விருது பெற்ற மனோஜ் குரூரின் மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான நிலம் பூத்து மலர்ந்த நாள் எனும் புத்தகத்தை பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது.17 கட்டுரைகள் கொண்ட அருமையான புத்தகம் இது.

(86) எழுத்தே வாழ்க்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா இந்த புத்தகத்தில் தனது குடும்பம், நண்பர்கள், பள்ளி நாட்கள் என சிறு வயது முதல் தனது அனுபவங்களை சுவைபட எழுதியுள்ளார்.பழைய புத்தகக்கடை பற்றி அவரது எழுத்துக்களில் எப்போதுமே வாசிக்கலாம். அவருக்கு பிடித்த இடங்களில் ஒன்று அது. வாழ்வில் சில உன்னதங்கள் என்ற கட்டுரையில் பழையபுத்தகக் கடையுடனான தனது அனுபவங்களை எழுதியுள்ளார். அந்த தலைப்பே ஒரு புத்தகத்தைப்பற்றியது தான்.விட்டல் ராவ் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாசித்து இருக்கின்றேன். இளையராஜாவின் பாடல்களுக்கு தான் மிகவும் ரசிகன் என்பதையும் இளையராஜாவை சந்தித்த அனுபவங்களையும் இளையராஜாவின் ரசிகன் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். நயகரா முன்னால் என்ற கட்டுரையில் நயகராவை சென்று பார்த்ததை அங்கு ரசித்தவற்றை பற்றி எழுதியுள்ளார். ஜப்பானில் சில நாட்கள் என்ற ஜப்பானைப் பற்றிய ஒரு பெரிய கட்டுரையும் உண்டு. பார்த்தவற்றை மட்டும் எழுதுவது சிறந்த பயணக் கட்டுரையாக அமையாது. அவர் ஜப்பானின் பண்பாடு, வரலாற்றுடன் எழுதியவற்றை வாசிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவரது ஏனைய கட்டுரைகள் போலவே இந்த தொகுப்பும் மிக முக்கியமானது.மொத்தமாக 30 கட்டுரைகள் கொண்ட சிறந்த புத்தகம்.

(85) வாழும் நல்லிணக்கம் - சபா நக்வி

தமிழில் முடவன் குட்டி முகம்மது அலி

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா ஒரு உரையில் ஒரு முறை சொல்லியதால் வாங்கினேன். ஆசிரியர் இந்தியாவில் சமய நல்லிணக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என ஆராய்ந்து எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார்(முஸ்லிம் பெண்)வழிபாடு, பூரி ஜெக நாதர் ரத யாத்திரையில் முஸ்லிம் கவிக்கு மரியாதை செலுத்த ரதம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றது போன்ற முக்கிய செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

(84) எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

உயிரினங்கள் மேல் ஈடுபாடுள்ள ராமும் அவர் மனைவி ஜானகியும் பெரும்பாலும் காடுகளில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது வீடும் காட்டுக்கு அருகில் தான் இருக்கிறது.பாம்பு, முதலை,சிறுத்தை கூடவே வாழ்ந்த அவர்களது வாழ்க்கை பிரமிப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தை ஜானகி தான் எழுதியுள்ளார். ராம் ஒரு அமெரிக்கர். ஆனால் இந்தியாவில் தான் சிறு வயது முதல் அவரது தாயாருடன் வாழ்ந்திருக்கின்றார். இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்திருக்கின்றார். பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார். 


அவர்களுக்கு பாம்பு, முதலைகளைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கின்றது. பாம்புகளை எவ்வாறு இனம் காண்பது, எந்த வகைப் பாம்புகள் எங்கு இருக்கும் என எல்லாமே விரிவாக பதிவு செய்துள்ளார். இருவருமே ஒரு சாகச வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள்.முள்ளம்பன்றியை , பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார்கள் என்றால் சும்மாவா. அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மிருகங்களுடனும் பறவைகளுடனும் தான் மனிதர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. விலங்குகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். ராம் இந்தியாவின் முதலைகள், பாம்புகளின் பாதுகாப்புக்காக நிறைய பாடுபட்டுள்ளார். இந்திய அரசின்  பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.எமக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகம் இருக்கின்றது என வியக்க வைத்த புத்தகம்