Sunday 2 August 2015

(36) மெலூஹாவின் அமரர்கள் - Amish Tripathi

The Immortals of Meluha

தமிழ் மொழிபெயர்ப்பு : பவித்ரா ஸ்ரீநிவாசன்


 இந்துக்களின் கடவுளான சிவன் ஒரு மனிதனாக இருந்து கடவுளாக்கப்பட்ட ஒருவராக இருந்திருந்தால்....  என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்ட கதை தான் "மெலூஹாவின் அமரர்கள்" . சிவா, அவர் மனைவி சதி, சதியின் தந்தை அரசன் தக்க்ஷன், வீரபத்ரர், நந்தி  என பலரும்  கதா பாத்திரங்களாக்கப்பட்டுள்ளனர்.

 மெலூஹா என்ற சிறப்பு வாய்ந்த நகரத்திற்கு சிவாவை நந்தி அழைத்து வருகிறார். மெலூஹாவில் மந்திர மலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோமபானம் அருந்தியவுடன் சிவாவின் கழுத்து நீல நிறமாகிவிட அவரே தமது தலைவர் என மெலூஹாக்கள் கூறுகின்றனர். மெலூகா மக்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். இராம பிரான் வகுத்த சட்டங்களைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கும் சந்திர வம்சத்தினருக்கும் பகை. சிவன் தலைமையில் சந்திர வம்சத்தினருடன் மிகப்பெரும் போர் நடை பெறுகிறது. சந்திர வம்சத்தவர்களை சிவா தலைமயிலான படை வென்றுவிட சிவா அவர்களது தலை நகர் அயோத்தி செல்கிறார். சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் இல்லை என்ற விடயம் சிவனுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கிறது. அவர்கள் அன்பானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களும் நீலகண்டருக்காக காத்திருப்பது சிவனுக்கு தெரிய வருகிறது.சிவனுக்கு எல்லாமே குழப்பமாகிவிடுகிறது. பண்டிதர் ஒருவர் அவரது குழப்பங்களை தீர்க்கிறார்.

சிவன் ஒரு மனிதனைப் போல நடனமாடுகிறார். சதியைக் காதலிக்கிறார். திருமணம் செய்கிறார். போர் செய்கிறார்  . தனது கழுத்து நீல நிறமாகியதற்கு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதற்கு மேலாக புகை ப் பிடிக்கிறார்.  பாண்டிய மன்னர்களைப் பற்றியும் புத்தகத்தில் வருகிறது. பண்டிதர் என்ற சொல் பாண்டியர் என்றதிலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று எழுத்தாள்ர் கூறுகிறார். முதல் பாகமான இந்த புத்தகத்தில் நாகர்கள் பற்றிய மர்மம் தீரவில்லை. அடுத்த புத்தகம் The Secret of the Nagas  தானே.

கி.மு 1900 இல் நடைபெறும் கதை என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்திலேயே சிறப்பான, வசதியுடைய நகரமாகத்தான் மெலூஹா இருக்கிறது. கதைக்கும் மொழி இன்றைய திரைப்பட  பாணியிலான ஒரு வகை மொழியாக காணப்படுகிறது. மொழிபெயர்ப்பில் பிரச்சினையா அல்லது  ஆங்கிலத்திலும் இதே பாணியில் தான் அமைந்திருக்கிறதா என தெரியவில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு" மெலூஹாவின் அமரர்கள்" சிறந்த புத்தகமாக தோன்றுமா என தெரியவில்லை.  என்னைப் பொறுத்த வரை , பொன்னியின் செல்வனுக்கு பின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு வாசிக்க பேரார்வம் வந்தது போல‌  இந்த புத்தகத்திற்கு வரவில்லை.  இந்த எழுத்துகளில் ஏதோ ஒன்று missing.

 Amish Tripathi யின்  The Immortals of Meluha, The Secret of the Nagas , The Oath of the Vayuputras ஆகிய மூன்று புத்தகங்களும் சிவா முத்தொகுதி ( Shiva trilogy)  என  குறிப்பிடப்படுகின்றன.  இந்தியாவில் விற்பனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய  புத்தகங்களாக கருதப்படுகின்றன. "மெலூஹாவின் அமரர்கள்" வெற்றியைத்தொடர்ந்து  Amish Tripathi  " The Secret of the Nagas"   "The Oath of the Vayuputras" ஆகிய புத்தகங்களை எழுதினார். மூன்று புத்தகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

No comments:

Post a Comment