Tuesday 11 August 2015

(38) விசும்பு - ஜெயமோகன்


எனக்கு தெரிந்து தமிழில் அறிவியல் கதைகள் எழுதுபவர் எழுத்தாளர் சுஜாதா தான்.  அறிவியல் புனைகதைகள் எனும் போது விண்வெளி , இயந்திர மனிதர் , வேற்றுக்கிரக வாசிகள் போன்றவையே  நினைவுக்கு வருவது சுஜாதாவின் தாக்கமாக இருக்கலாம்.


ஜெயமோகன் நமது பண்பாடு , ரசவாதம் , சித்த மருத்துவம் தொடர்பாக அறிவியல் கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்த போது வாசிக்க வேண்டும் என நினைத்தேன். அண்மையில் தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நிச்சயமாக புதுவித அனுபவமாக இருந்தது. அத்துடன் இக்கதைகள் நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருக்கின்றன. பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.


ஐந்தாவது மருந்து
 எயிட்ஸ் இற்கு மருந்து கண்டுபிடித்த தளவாய் ராஜாவை பார்க்க அவனது நண்பர்  இருவர் அவனது ஊருக்கு வருகின்றனர். அவர்களுக்கு இடையே நடை பெறும் உரையாடலாக கதை அமைக்கப்பட்டுள்ளது. பரிணாமக்கொள்கை , சித்த மருந்து , சுவடிகள் , வரலாற்றில்  இதே அறிகுறி உடைய நோய் பற்றிய தகவல் என கதை அவ்வளவு நன்றாக இருக்கும்.

இங்கே , இங்கேயே..
வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்கள். அவர்களது  வாகனத்தின்தடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என நம்பப்படும் கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. கல்லன்மலை உச்சியில் உள்ள தடம் விண்வெளி ஊர்தியின் தடமாக இருக்க வேண்டும் என நம்புகிறார்  நாராயணன் .  இல்லை அது அவ்வாறு இருக்க முடியாது என பத்மநாபன் கூறும் காரணங்கள்  விஞ்ஞான ரீதியானவை.

விசும்பு
இது பறவைகள் வலசை போவது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பறவைகள் வலசை போவது பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலையும் இக்கதை தரும்.  நஞ்சுண்டராவ் , அவரது மனைவி , அவரது தந்தை கருணாகரராவ் எல்லோரும் interesting characters.

பித்தம் -
இது ரசவாதம் தொடர்பான கதை. சில சித்தர்கள் இக்கலை பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள் என நம்பப்படுகிற‌து. செம்பை  தங்கமாக்கும்  முயற்சி இன்றும் பலர் செய்துபார்க்கிறார்கள்.

உற்று நோக்கும் பறவை:
இக்கதையை வாசித்த போது துவாத்மர்கள் என்பவர்கள் உண்மையில் இருந்தவர்கள் தான் என நான் நம்பி இணையத்தில் தேடினேன். ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய பதி  கடிதத்தில் அது கற்பனையாது எனக் கூறியிருந்தார். இது உளவியல் , மனப்பிளவு தொடர்பான கதை.

 மூளையின் இயக்கம்  தொடர்பான பூர்ணம்  மற்றும் நாக்கு , நம்பிக்கையாளன் போன்ற கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. கடைசி இரு கதைகளும் பேச்சு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.  "குரல்" என்ற கடைசி பேச்சு வடிவ சிறுகதை என்னைப் பொறுத்தவரை சிறந்த நகைச்சுவை கதையாகவும் இருந்தது.

எழுத்தாளர் விசும்பு , அறம் போன்ற கதைகளையும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்காக இடைக்கிடை எழுதினால் பலர் பயன் பெறுவார்கள்.


No comments:

Post a Comment