Monday 22 April 2019

(77) இஸ்தான்புல் - ஓரான் பாமுக்

"இஸ்தான்புல் -  ஒரு நகரத்தின் நினைவுகள்" துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் இன் புத்தகம். இது வரையில் அவர் எழுதியவற்றுள்  நாவல் அல்லாத அபுனைவு வகையைச் சேர்ந்த ஒரே ஒரு நூல் இதுவே. ஜி.குப்புசாமி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். பாமுக் தான் பிறந்து வளர்ந்த நகரத்தில் தனது நினைவுகளை அந் நகரின் வரலாற்றுடன் இணைத்து எழுதியுள்ளார். அவரது  சிறு வயது ஞாபங்கள் முதல் அவர் எழுத்தாளராவது என முடிவெடுத்த தருணம் வரை பயணிக்கும் கதையை மிகவும்  ரசிக்கும் படி எழுதியுள்ளார்.

பொதுவாக நான் இந்திய நாவல்கள் தவிர்த்து வேறு நாவல்கள் வாசிப்பதில்லை. இந்திய கலாச்சாரம் நான் மிகவும் அறிந்த, சிறு வயது முதலே படித்த , எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்பதால் இந்திய நாவல்கள் , கட்டுரைகள் விரும்பி வாசிப்பேன். வேற்று நாட்டு நூல்களை முயற்சிப்பது கூட நான் விரும்பாத ஒன்றாக இருந்தது. இணைய யுகத்தில் வாழ்வதால் வாசிப்பிற்கான பல வாசல்களை அதுவே திறந்து வைப்பது இன்றைய காலத்தில் ஒரு வரம். இணையத்தில் எங்கோ பாமுக் பற்றி படித்த‌ நினைவிலேயே நூலகத்தில் இருந்து 'பனி' என்ற அவரது நாவலை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பாதிப்பிலேயே 'இஸ்தான்புல்' என்ற இந்த புத்தகத்தையும் எடுத்து வந்தேன். ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு என்பது கூடுதல் நம்பிக்கையைத் தந்தது. புத்தகம் அவ்வளவு பிடித்துவிட்டது. இதில் மொழிபெயர்ப்பின் பணி முக்கியம் என நினைக்கிறேன். எந்த ஒரு இடத்திலும் வேற்று மொழி நூல் வாசிப்பது போன்ற உணர்வே வரவில்லை. மூலத்தில் கூட இவ்வளவு நன்றாக இருக்குமோ என பல வசனங்களை வாசிக்கும் போது சந்தேகம் வந்தது. 

வாசித்து முடித்த பின் துருக்கி, இஸ்தான்புல், பாஸ்ஃபரஸ் (Bosporus), ஆட்டமன் பேரரசு என இணையத்தில் தேடிப் படித்தேன். அதன் பின் புத்தகம் இன்னும் நெருக்கமாகியது.  பாஸ்ஃபரஸ் நீரிணை பாமுக்கோடு கலந்துவிட்ட ஒன்று. பாஸ்ஃபரஸில் வந்து செல்லும் கப்பல்களை ஜன்னலூடு பார்ப்பது இஸ்தான்புல் வாசிகளின் வேலைகளில் ஒன்று. பொஸ்போரஸ் நீரிணையானது  ஐரோப்பாவையும் ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருக்கிறது. இஸ்தான்புல் நகரானது  பொஸ்போரஸ் கடலால் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இஸ்தான்புல் இரு கண்டங்களில் அமைந்துள்ள  நகரமாக விளங்குகின்றது.இதனால் இஸ்தான்புல் வாசிகளிடம் இருந்து  பொஸ்போரஸ் நீரிணையை பிரித்து பார்க்க முடியாது.சர்வதேசக் கப்பல்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்த நீரிணை உள்ளதால் மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 


  உலக வரலாற்றில், நான்கு பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புல் இற்கு இருக்கிறது.  1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, துருக்கியின் தலைநகரம், இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.  ரோமப் பேரரசு,  பைசண்டைன் பேரரசு, இலத்தீன் பேரரசு  ஓட்டோமான் பேரரசு ஆகியவற்றிற்கு தலைநகரமாக விளங்கிய நகரின் வீழ்ச்சி எவ்வளவு துயரானது. 


மிகப்பெரிய ஆட்டமன் பேரரசின் வீழ்ச்சியைப் பற்றிய துயரை இந்த நூலைப் படிப்பவர்கள் உணர முடியும். மேலைத்தேய மயமாக்கல் தொடர்பான பிரச்சினைகள் , மொழிச்சீர்திருத்தம், பழைய பாழடைந்த கட்டடங்கள் என இஸ்தான்புல் நகரம் சந்தித்த பிரச்சினைகளை தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.



No comments:

Post a Comment