Sunday 13 December 2015

(41) நண்டு - சிவசங்கரி

நண்டு மணலில் குறித்த ஒரு இடத்தினூடாக தலையை நீட்டும் நண்டைப் பிடிக்க முயல்கையில் அது உட் சென்று வேறு ஒரு இடத்தினூடாக எட்டிப்பார்க்கும். அதைப்பிடிக்க சுற்றியுள்ள பிரதேசத்தை அப்படியே அகழ்ந்து எடுக்க வேண்டும். சில வேளைகளில் அப்போது கூட அகப்படாமல் போய்விடும். அதன் வளையானது சிக்கல் தன்மையுடையது. நண்டு எவ்வாறு மணலில் வளைகளை உருவாக்கி அகப்பட முடியாமல் வாழ்கிறதோ அதே தன்மையைப் புற்று நோயும் கொண்டுள்ளது.   இதனால் தான் புற்று நோய்க்கான சின்னமாக நண்டு வைக்கப்பட்டுள்ளது. நண்டு இலத்தின் மொழியில் cancer என்று குறிப்பிடப்படுகிறது.


தற்காலத்தில் இலங்கையில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கிருமி நாசினி அதிகம் பாவிக்கப்பட்ட மரக்கறிகள் , யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட த‌டை செய்யப்பட்ட ஆயுதங்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
"நண்டு" நாவலும் அவ்வாறான நோயின் கொடூரத்தை விபரிக்கும் ஒரு நாவல். சீதா என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியும் அவளது வட நாட்டு கணவன் ராம்குமாரின் அன்பு, அன்பான நண்பி சுமித்திரா , சுய நலம் மிக்க அக்கா கணவர் மூர்த்திக்கு இடையில் கதை பின்னப்பட்டுள்ளது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்படும் சீதாவின் கதையூடாக நோயின் கொடூரம் , சுற்றியுள்ளவர்கள் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கான சிகிச்சை என்பன பற்றி எழுதப்பட்டுள்ளது. நோயைப்பற்றி ஒருவிதமான பயத்தை, சிறிய விழிப்புணர்வை உருவாக்குமாறு நாவல் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment