இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்களாக அறியப்படுபவர்கள் பலரது எழுத்துக்கள் வாசிப்பதற்கு கடினமானதாக இருக்கும். செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் அறியப்படும் க. குணராசா இந்த வகையிலிருந்து மாறி அனைவருக்கும் புரியும்படியும், அதே வேளையில் சுவாரசியமாகவும் எழுதுபவர். வரலாறு, சமூகம், நகைச்சுவை என பல தளங்களில் எழுதி வருகிறார். இவரது நல்லூர் முருகன் ஆலய வரலாறு பற்றிய நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.
நல்லூர் முருகன் ஆலயம் யாழ்ப்பாணத்தவர்களது வாழ்வுடன் பிணைந்த ஒரு ஆலயம். திருவிழா நடைபெறும் 25 நாட்களும் யாழ் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அலங்காரக் கந்தன் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் நல்லூர் முருகன் தேரில் வரும் காட்சி அப்படி அழகாக இருக்கும். நல்லூர் திருவிழாவை ஒட்டி புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், இலங்கையின் வேறு பகுதியில் வசிப்பவர்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் பலரும் வருவதுண்டு. நல்லூர் ஆலயம் பற்றி பலரும் தமது அனுபவங்களை சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். மனம் நிறைந்த நல்லூர் ஆலய வரலாறை கூறும் நாவல் தான் 'கந்தவேள் கோட்டம்'.
இலங்கை கோட்டை இராட்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் இந்தியவின் மலையாளப் பகுதியில் இருந்து பணிக்கனாக (யானை பழக்குபவர்கள்) பணிபுரிய வந்த வீரன் பராக்கிரமபாகுவின் தங்கையை மணம் புரிகிறான். அவர்களுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் மூத்தவன் சப்புமல் குமாரயா எனப்படும் செண்பகப் பெருமாள். இவன் பிற்காலத்தில் சிறி சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பராக்கிரமபாகுவிற்கு ஆண் வாரிசு இல்லாததால் சப்புமல் குமாரனை அடுத்த வாரிசாக நினைக்கிறான். (பின் மகளுடைய மகனை அரசனாக்குகிறான் என்பது வேறு விடையம்) சப்புமல் குமாரயா யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வந்த போது அவனது அமைச்சனாக இருந்த விஜயபாகுவால் நல்லூர் ஆலயம் அழிக்கப்படுகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர் புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. பின் சப்புமல் குமாரனே வேறு ஓர் இடத்தில்(முத்திரைச்சந்தி) நல்லூர் ஆலயத்தை கட்டிக் கொடுக்கிறான்.

நல்லூர் கந்தசுவாமிகோயில் கட்டியமான
"ஸ்ரீமான் மகாராஜாதி ராஜய அகண்ட பூமண்டல ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி ஸ்ரீ கஜவல்லி மகா வல்லி ஸமேத ஸ்ரீ சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சிவகோத்திரோற்ப வகா இரகுநாத மாப்பாண முதலியார் சமூகா"
எனும் வாக்கியத்துடன் நாவல் நிறைவடைகிறது.
நல்லூர் ஆலயத்தை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த நாவல் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.
No comments:
Post a Comment