A.R.ரஹ்மானின் முன்னுரையுடன் வெளியாகியுள்ளது. 'ஸ்ப்ரெசதூரா' என்ற இத்தாலிய வார்த்தையை தன் நண்பனிடம் கற்றதாகவும் , மிகவும் சிக்கலான விடயத்தை மிகவும் எளிதாக செய்து முடிக்க கூடிய விஷயமாக முன் வைத்தல் என்ற அர்த்தமுடைய அந்த வார்த்தை, மணிரத்னத்திற்கு பொருத்தமானது என எழுதியுள்ளார். தன்னுடைய வேலை மிகவும் எளிமையானது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தோற்றத்தை உருவாக்குபவர் என்றும் உண்மையில் அவரது வேலை சுலபமானது அல்ல, அதற்கு பின் கடுமையான உழைப்பு, செய் நேர்த்தி இருக்கிறது என்று ரஹ்மான் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.
மணிரத்தினம் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அல்ல. M.B.A படித்தவர். மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒரு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். அது மிகவும் பிடித்ததாக இருக்க சினிமாவுக்குள் நுழைந்தார்.பல்லவி அனுபல்லவி,உணரு, பகல் நிலவு, இதயக்கோயில் போன்ற ஆரம்ப காலப் படங்களில் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார். இதயக்கோயில் படத்தில் இளையராஜாவின் பாட்டை தவிர வேறு எதையும் தான் நினைவு வைத்திருக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார். பல்லவி அனுபல்லவி 1980 இல் எழுதி 1983 இல் வெளியானது. கன்னடத்தில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.அதற்குப் பின் தான் விரும்பியபடி எடுத்த படம் மௌனராகம் எனக் குறிப்பிடுகிறார்.
மௌனராகத்தில் பெண் விவாகரத்து கோருவதால் A சான்றிதழ் வழங்க வேண்டும் , அது வழக்கத்திற்கு மாறான காட்சி என சென்சார் சொன்னதால் அதிலிருந்து அவர்கள் என்ன சொன்னாலும் தான் ஆச்சரியப்படுவதில்லை என மணிரத்னம் கூறியிருப்பது சிரிப்பைத் தந்தாலும் ஒவ்வொரு இயக்குனர்களும் எவ்வளவு திண்டாடுவார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. பிலிப்பைன்ஸ் - அமெரிக்கா இடையிலான Readers digest இல் வந்த ஒரு கட்டுரையே கன்னத்தில் முத்தமிட்டால் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறுகிறார். அது குழந்தையின் பார்வையில் எடுக்கப்பட்ட படம். முதலில் குடை என்றே அந்தப் படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். குடை என்பது குடும்பம், உறைவிடம் எனப் பொருள் தரக் கூடியது. படத்திலும் குடை முக்கிய காட்சியில் இடம் பெறுகிறது.அவரது ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனியான தலைப்புகளில் உரையாடல் இடம்பெற்றிருப்பது வாசிப்பதற்கு நன்றாகவும் படங்களை இன்னும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவியாகவும் இருந்தது. அனைத்துப் படங்களையும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும்.