Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Wednesday, 3 June 2020

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் - ஜெயமோகன் - 1

"ஆனையில்லா "

ஆரம்பத்தில் சாதாரணமாக வாசித்துக்கொண்டிருந்த கதைகளில், எனக்கு தீவிரமான பிடிப்பு ஏற்பட காரணமான முதல் கதை இது. அதனால் மறுவாசிப்புக்கு முதலில் இக்கதையையே தெரிவு செய்தேன்.

எராளி ஐயப்பனின் வீட்டிற்குள் ஆனை புகுந்து விட்டது. ஆனையால் வெளியில் வரமுடியவில்லை. ஆனையை மீண்டும் வெளியே கொண்டுவர வேண்டும்.

இதற்கு பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று சிறுவனான கதைசொல்லி  குடையை மடக்குவது போல ஆனையை மடக்கினால் வெளியே எடுக்கலாம் என சொல்வது. தந்தையின் திட்டு மூலமும் டீக்கனாரின் சிரிப்பு மூலமும் அது நிராகரிக்கப்படுகிறது. அடுத்து கிரீஸ் பூசுவது. அது தொடர்பான உரையாடல்கள் சுவையின் உச்சம். இறுதியாக  பூசாரியை வர வைக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று, ஐயப்பனின் மனைவி தன்  மகள் நாராயணியை திட்டுவதும் அதற்கு அவள் தன்னுடன் கூடப் படிக்கும் கதை சொல்லியைப் பார்த்து நெளிவதும் அத்துடன் அவளது முகத்தைப் பார்க்கும் போது ஆனை வீட்டிற்குள் சென்றது பள்ளிக்கூடத்தில் தனக்கு பெருமையா அல்லது இழிவா என அவள் இன்னும் முடிவெடுக்க‌வில்லை என தெரிந்தது என சொல்வதும்.


இந்தச் கதையை அழகூட்டுவது சின்ன சின்ன உரையாடல்கள். ஆனைக்கு அபமிருத்யூ வந்த நாட்டில் கஜலக்ஷ்மி போய்விடுவா.கஜலக்ஷ்மி பின்னால் மற்ற லக்ஷ்மிகளும் போய்விடுவார்கள். அவர்கள் ஒரு கூட்டமாக்கும்  என ஒருவர் சொல்லும் போது ஸ்டீபன் மேரியும் ஒரு லக்ஷ்மியாக்கும், ஒன்பதாம் லக்ஷ்மி என சொல்வது அதில் ஒன்று. இக்கதையில் வரும் ஸ்டீபன் , கரடி நாயர் குழாமை கடுப்படிக்க கதைப்பவர்.

ஆனை வீட்டிற்குள் நுழைந்ததற்காக சொல்லப்படும் காரணம், ஆனை வெளியே வரும் வரை வீட்டிற்குள் இருந்த கிழவியைப் பற்றி யாருமே நினைக்காமல் இருந்தமை, பூசாரியைப் பற்றி அங்கு இருப்பவர்கள் கதைப்பது, பூசாரி கரடி நாயரை வம்புக்கு இழுப்பது,ஆனையை வெளியே கொண்டு வர பூசாரி கையாண்ட முறை  என எல்லாமே ரசிக்கும் படி உள்ளது.

 மொத்தக்கதையையே ஒரு உருவகமாகவும் கொள்ளலாம்.