Showing posts with label இறையன்பு. Show all posts
Showing posts with label இறையன்பு. Show all posts

Tuesday, 6 May 2014

8. இனியவை இனியவை இறையன்பு

இனியவை இனியவை இறையன்பு


 இறையன்பு ஐ.ஏ.எஸ்  எழுதிய  கட்டுரைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவரது நண்பர் ஆவுடையப்பன் தொகுத்த புத்தகமே "இனியவை இனியவை இறையன்பு". peppers TV யில் புத்தகம் பற்றிய இறையன்புவின் கலந்துரையாடல் பார்த்த பின் அவர் எழுதிய புத்தகம் படித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்தது. அண்மையில் நூலகத்தில் இறையன்பு என்ற பெயருடன் இப்புத்தகத்தை கண்டவுடன் எடுத்து வந்து வாசித்தேன்.

சிந்தனை உலகம், ரசனை உலகம், சித்திரவிசித்திரங்கள்,படைப்ப்புலகம் என்ற பிரிவுகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் வாசிக்க எளிமையாக உள்ளது.சிறிய கதைகளை சொல்வதன் மூலமோ சம்பவங்களை சொல்வதன் மூலமோ கட்டுரையை மேலும் சுவாரசியமாக்கும் திறன் அவரிடம் உள்ளது.

பொதுவாக மொட்டை கடிதங்கள் எனப்படும் முகவரியிடாத கடிதங்களை தாம் பெரிதாக எடுத்துக்கொளவதில்லை என்றும் ஆனால் சில கடிதங்கள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு, கள்ள சாராயம் காய்ச்சுவது பற்றி ஒருவர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டிருந்தார். நேரடியாக  விடயத்தை சொல்லாமல் 'பானை தன் சுயசரிதை கூறல்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கடிதம் வித்தியாசமாக நகைச்சுவை உணர்வுமிக்கதாக இருந்தது.

அதே போல கையெழுத்து பற்றிய  கட்டுரையில் சொன்ன கதையும் சிரிப்பை வரவைத்தது. நவீன ஓவிய கண்காட்சியின் போது ஒருவர் தனது ஓவிய‌த்தை மட்டும் ஏன் தலைகீழாக மாட்டியிருப்பதாக கேட்டிருக்கிறார். அதற்கு  அவர் தனக்கு எது சரியான பக்கம் என்று குழப்பமாக இருந்ததால்  கையெழுத்து நேராக உள்ளவாறு  பார்த்து  மாட்டியதாக கூற அந்த ஓவியர் தான் எப்போதும் தலைகீழாக தான் கையெழுத்து போடுவதாக கூறியிருக்கிறார்.

படைப்புலகம் என்னும் பகுதியில் தொகுக்கப்படுள்ள கதைகளில் 'தலைமாணாக்கன்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அக்கதை துரோணர், ஏகலைவன் உறவை பற்றியது . ஏகலைவனின் கட்டைவிரலை குரு தட்சணையாகயாக பெற்றுக்கொண்டதால் துரோணருக்கு ஏற்பட்ட தீராத பழியை போக்கும் வகையில் அக்கதையை வடிவமைத்திருப்பார்.

 இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும்  பணிவாக நடந்துகொள்ளும் இறையன்பு  சிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல சிறந்த மனிதரும் தான்.