Thursday 26 June 2014

(15) பால்யகால சகி - பஷீர்

பால்யகால சகி - வைக்கம் முகமது பஷீர் (மலையாளம்)
தமிழில்: குளச்சல் மு. யூசுப் 


மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் பஷீரின் நாவல்கள் வாசிப்பதற்கு எளிமையானவை. பஷீரின் இளம் பருவ தோழி பற்றிய கதையாகவே இந்த நாவல் சொல்லப்படுகிறது. வெறும் 80 பக்கங்கள் மாத்திரமே கொண்ட "பால்யகால சகி" நாவல் தரும் உணர்வுகளோ அதிகம். பால்யகால சகி என்ற பெயரிலேயே ஒரு கவர்ச்சி ஒட்டிக்கொண்டு விடுகிறது. 

 மஜீதுவும் சுகறாவும்  நண்பர்கள். அவர்களது சிறு வயது நட்பு என்னவோ மோதலில் தான் தொடங்கியது. சுகறாவின் வீட்டில் அருகில் இருக்கும் மாமரத்தில் இருந்து பழம் விழும் சத்தம் கேட்டு அவள் வருவதற்கு முன்னரே மஜீது எடுத்து அதை சாப்பிட தொடங்கியிருப்பான். மஜீது மேல் கோபம் அதிகரித்து ஒரு நாளில் தனது நகங்களால் அவனை பிராய்ந்து விட்டாள்.  அதற்கு அவன் சற்று பயப்படவே அதை அவள் தொடரவும் செய்கிறாள். அவளது நகத்தை வெட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த மஜீது "சிலரு சும்மா என்னை பறண்டவும் நுள்ளவும் செய்யுதாங்க. அவங்களுக்கு இது ஒரு சுகம். இனி நான் மரிச்சு போனா அவுங்க சொல்லுவாங்களா இருக்கும், அந்த பாவப்பட்ட மஜீது இருந்தா ஒரு நுள்ளாவது குடுக்கலாமேன்னு" என்ற வசனம் மூலம் நகத்துக்கு ஒரு முடிவு கட்டிவிடுகிறான்.

சுகறா படிப்பில் கெட்டிக்காரி. மஜீது படிப்பில் மொக்கு. ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்டதற்கு 'கொஞ்சம் பெரிய ஒன்று ' என்று சொல்லி  அதுவே அவனது பெயராகவும் போகிறது. மஜீதின் அப்பா அந்த ஊரின் பணக்காரர்களில் ஒருவர். சுகறாவின் அப்பாவோ பாக்கு விற்கும் ஏழை. சுகறாவின் அப்பா இறந்து விட அவளது படிப்பும் நின்றுவிடுகிறது. வீட்டில் ஏற்படும் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு செல்லும் மஜீது பத்து வருடங்களின் பின் சுகறாவை திருமணம் செய்யும் ஆசையில் திரும்பிவர வீட்டில் எல்லாமே தலைகீழாகி இருக்கிறது. மஜீது வீட்டிலோ கடன் சுமை கூடி கஷ்டப்படுகிறார்கள். சுகறாவோ இரண்டாம் தாரமாக‌, திருமணம் செய்து சென்று விடுகிறாள்.அங்கு அவளுக்கு சித்திரவதை தான்.


பால்ய கால நண்பர்கள் இருவரும் நீண்ட காலத்துக்கு பின் சந்தித்து கொள்கிறார்கள். நிறைய கதைத்துக்கொள்கிறார்கள். தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காகவும் சுகறாவை திருமணம் செய்வதற்காகவும் மஜீது ஏதாவது உழைக்க வேண்டும் என எண்ணி வீட்டை விட்டு கிளம்புகிறான். கிளம்பும் வேளையில் சுகறா ஏதோ சொல்ல வந்தும் சொல்லமுடியாமல் போய்விடுகிறது.

பல இடங்கள் அலைந்து ஒரு வேலை பெற்று வீட்டிற்கு  பணம் அனுப்பும் மஜீதுவுக்கு விபத்து ஒன்றில் ஒரு கால் போய்விடுகிறது. அதன் பின் அந்த வேலையில் தொடர முடியாததால் வேறு வேலை தேடி அலைகிறான். இறுதியில் எச்சில் பாத்திரம் கழுவும் வேலை கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்து செய்யும் வேலை தானே. அப்போது சுகறா இறந்த செய்தியை தாங்கிய அவனது அம்மாவின் கடிதம் வருகிறது. வீட்டை விட்டு கிள‌ம்பும் போது அவள் கடைசியாக சொல்ல வந்தது என்ன என்ற வினாவுடன் நாவல் நிறைவடைகிறது.


இந்த நாவல் மம்முட்டி நடிப்பில் திரைப்படமாக வந்திருக்கிறது. பார்க்க வேண்டும்.
 






No comments:

Post a Comment