Wednesday 1 September 2010

வேங்கையின் மைந்தன்

புத்தகம் : வேங்கையின் மைந்தன்
ஆசிரியர்: அகிலன்
பொன்னியின் செல்வன் பாதிப்பால் அதில் வரும் வந்தியதேவன், குந்தவை போன்றவர்களை மீண்டும் காணும் ஆர்வத்தால் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாவல் அகிலனின் 'வேங்கையின் மைந்தன்'. இதன் ஆசிரியர் அகிலனுக்கு இந் நூலுக்காக சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. பொன்னியின் செல்வரின் மகன் ராஜேந்திர சோழன் காலத்தை பற்றி பேசுகிறது இந்நாவல். ராஜராஜசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் (பொன்னியின் செல்வனில் வானதி)பிறந்தவரே ராஜேந்திரன். ராஜேந்திர சோழன் 50 வயதளவிலேயே முடி சூடிக்கொண்டதால் அவரது முதுமைக்காலத்தை பற்றியே நாவல் பேசினாலும் அக் காலத்திலேயே ஈழம் சென்று மணிமுடி கைப்பற்றியமை , கங்கைகொண்ட சோழபுரம் அமைத்தமை போன்ற அவரது சாதனைகள் இடம்பெற்றமையால் வாசிக்க சுவையாக உள்ளது. இந் நாவலில் வந்தியதேவன் கிழவராக வருகிறார். ராஜேந்திரனுக்கு அரசியலில் ஆலோசனைகள் சொல்வதுடன் இளங்கோவுடன் ஈழம் சென்று மணிமகுடம் கைப்பற்ற உதவுகிறார்.


பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் போல வேங்கையின் மைந்தனில் இளங்கோ என்பவனே நாயகன். சோழப்பேரரசுக்காகவே தம் வாழ் நாட்களை அர்ப்பணித்த கொடும்பாளூர் வேளிர் குலத்தை சேர்ந்தவன். ராஜராஜசோழன் காலத்தில் ஈழப்போரில் மாண்ட பூதி விக்ரமகேசரி இவனது பெரிய பாட்டனார் ஆவார். ராஜேந்திரனுக்கு அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என இரு புதல்விகள். மூத்த புதல்வியான அருண்மொழி நங்கையையும் ரோகண இளவரசி ரோகினியையும் இளங்கோ திருமணம் செய்கிறான். அழகு, அறிவு, ஆற்றலில் சிறந்தவளான அருள்மொழியும் பேரழகியாக ரோகிணியும் என இரு நாயகிகள். பாண்டியர்கள் ஈழ மன்னரிடன் ஒப்படைத்த பாண்டிய மணிமுடியை கைப்பற்ற ராஜராகசோழன் காலத்திலேயே முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. ராஜேந்திரன் ஆட்சியில் இளங்கோ ஈழம் சென்று அம் முடியை கைப்பற்றுகிறான். ஈழ அரசனின் மகளான ரோகினியும் இளங்கோவும் காதலிக்கிறார்கள். ரோகிணி மூலமே மணிமுடி ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தெரிய வருகிறது. எதிரி நாட்டு வீரனை காதலிக்கும் ரோகிணி, தந்தைக்கும் , தம்பி காசிபனுக்கும் , நாட்டுக்கும் துரோகம் செய்கிறோமோ என துடிப்பதும் இளங்கோ மீது கொண்ட காதலில் இருந்து விடுபட முடியால் தவிப்பதுமாக இருக்கிறாள். ரோகிணி, இளங்கோ காதலே நாவலின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பல இடங்களில் வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது.



ஈழ நாட்டவர்களது உதவி இல்லாது தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் மணிமுடியை கைப்பற்றி இருக்க முடியாது.அதற்கு எதிரி அரசனின் மகளே உதவினாள் என்பது அதீத கற்பனையாகவே தோன்றுகிறது. சிங்கள அரசர்கள் பாண்டியர்களுடன் திருமண தொடர்புகள் வைத்திருந்ததாக வரலாற்றிலுள்ளது. சோழருக்கும் ஈழ மன்னர்களுக்கும் பாண்டிய மணிமுடி தொடர்பான போர் நீண்டகாலம் இருந்து வந்த நிலையில், எதிரி நாட்டு வீரனை ஈழ இளவரசி காதலித்தாள் என்ற கற்பனை கொஞ்சம் அதிகம் போலவே உள்ளது. பொன்னியின் செல்வனில் சோழ நாட்டுக்காகவே வாழும் குந்தவை மதிப்பு மிக்க பெண்ணாக போற்றப்படுகிறார். அவள் எடுக்கும் முடிவுகள் சோழ சாம்ராட்சியங்களுக்காகவே இருக்கிறது. வேங்கையின் மைந்தனில் கூட அருள்மொழி நங்கை தனது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய தன்னிகரற்ற பெண்ணாகவே சித்தரிக்கப்படுகிறாள். அப்படி இருக்க ஈழ நாட்டு ரோகிணி மட்டும் காதலுக்காக நாட்டையும் தந்தை, தம்பியையும் இழக்க நினைக்கும் பெண்ணாக காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இலங்கை வரலாற்றைப்பொறுத்தவரை, அரச குடும்ப பெண்கள் பல சந்தர்ப்பங்களில் போரில் வெற்றி பெற துணையாக நின்றுள்ளனர். நியாயமற்ற வழியாக இருந்தாலும் கூட . துட்டகைமுனு , எல்லாளன் போரை உதாரணமாக கொள்ளலாம். அப்படியிருக்க மகிந்தரின் மகள் எவ்வாறு எதிரி வீரனை காதலித்து தனது தந்தையின் ஆட்சி வீழ காரணமாக இருந்திருப்பாள். உண்மையில் மணி முடி கைப்பற்ற துணை புரிந்தவர்கள் யாராக இருக்கக்கூடும்.

ஈழ அரசன் மகிந்தனின் அமைச்சர் கீர்த்தி பற்றி குறிப்பிட வேண்டும் .சிறந்த ராஜதந்திரியாகவும் தமிழர்களை வெறுப்பவராகவும் இருக்கிறார். அடுத்து சுந்தர பாண்டியன், பாண்டியர்கள் சோழ ராட்சியத்தை வீழ்த்த செய்யும் சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜேந்திரன் இச்சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ராஜ ராஜனின் கனவாக இருந்த பாண்டிய மணிமுடி ராஜேந்திரனாலேயே நிறைவேறுகிறது.ராஜேந்திரர் காலத்தில் சோழ ராட்சிய விரிவாக்கம் அதிகம் இடம்பெறுகிறது. ஈழம் மட்டுமல்லாது கடாரம் வரை சென்று வெல்கிறான்.

இந் நாவல் சோழ ரட்சிய விரிவு, ஈழப்போர்,தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைமை மாறியமை போன்றவற்றை முதன்மையாக பேசுகிறது. பொன்னியின் செல்வன் வந்தியதேவன் போல் அல்லாது இளங்கோ தனியாக நின்று வீர சாகசங்கள் செய்கிறான். அதனால் யதார்த்தத்தன்மை குறைவான உணர்வை தருகிறது. இளங்கோ, ரோகிணி காதல் சில இடங்களில் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது. மற்றும்படி ராஜேந்திர சோழன் ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நாவல்.


வேங்கையின் மைந்தன்: வரலாற்று ஆவலர்கள்வாசிக்க வேண்டிய நாவல்.

(GOOD)

1 comment:

  1. we must be very proud about our ancestors. its an very wonderful novel, My favorite characters are: Elango, Arulmozhai,Rohini And always young vanthiyathevan :)

    ReplyDelete