Wednesday, 9 March 2016

(51) அம்மாவுக்கு ஒரு நாள் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் 27 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. 1950 - 60 இல் எழுதப்பட்டவை.

அம்மா படம் பார்க்க செல்லவேண்டும் என ரகுவை அன்று வேளைக்கு வீட்டுக்கு வரமுடியுமா எனக் கேட்கிறார். அந்தப் படத்தில் நீ பார்க்க பெரிதாக ஒன்றும் இல்லை எனக் கூறி வேலைக்கு கிளம்பும் ரகு பின் சீக்கிரமாக வீட்டுக்கு போக நினைத்தும் முடியாமல்ப் போய்விடுகிறது. ரயில் தாமதமாகி விட பஸ்ஸில் போக பணமில்லாமல் தவிக்கிறான். வீட்டிற்கு தாமதமாகவே வருகிறான். " நீ சினிமாவுக்கு போகவில்லையா?" என அர்த்தமில்லாமல் கேள்வி கேட்கிறான். அம்மாவுக்கு கோவித்துக் கொள்ளவே தெரியாது. தனக்கு ஏன் சீக்கிரம் வரமுடியவில்லை என்பதை சொல்வதால் பயன் ஒன்றும் இல்லை என சொல்லாமலே விட்டுவிடுகிறான்.
 - அம்மாவுக்கு ஒரு நாள் சிறுகதை




அனைத்துமே படிக்க வேண்டிய சிறுகதைகள்.

Friday, 5 February 2016

(50) கறுத்தக்கொழும்பான் - ஆசி கந்தராஜா

ஆசி கந்தராஜா புலம் பெயர் எழுத்தாளர். இவர் விவசாயப் பேராசிரியராக‌ இருப்பதால் அது தொடர்பான விடயங்களையும் சுவாரசியமாக கதைகளிடையே கொண்டு வந்து விடுகிறார்.
கறுத்தக் கொழும்பான் என்ற முதலாவது கதையே அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தவர்களுக்கு தான் அதன் அருமை நன்றாக தெரியும். அவுஸ்திரேலியாவில் கறுத்தக்கொழும்பு மரம் எப்படியாவது நாட்ட வேண்டும் என்று நினைக்கும் உடையார் மாமா இறுதியில் அதை விட முக்கியமாக அடுத்த சந்ததியினருக்கு தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என அது தொடர்பான பணியில் இறங்கும் கதை.

அடுத்து பனை , முருங்கை என்று  யாழ்ப்பாணத்தவர்களிடம் இருந்து பிரிக்கமுடியாத உணவு வகைகளைப்பற்றிய கதைகள்.  அவை தொடர்பான சகல விடயங்களையும் கதைகளில் சொல்கிறார்.  ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் இருப்பதால் கிழக்கு , மேற்கு ஜேர்மனி பற்றியும் தனது கதைகளில் தெளிவாக எழுதியுள்ளார்.
இவரது எழுத்துக்கள் இடையிடையே அ. முத்துலிங்கத்தை நினைவூட்டுகின்றன.

(49) அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

 மனிதர்கள் உணர்வுகளிற்கா அல்லது மனிதர் வகுத்த நியமங்களுக்கா முக்கியம் கொடுக்கிறார்கள் என்பது பதில் கூறமுடியாத சிக்கலான வினாவாக இருக்கிறது. உணர்வுகளுக்கு மிக்கியம் கொடுத்தாலும் கூட அவர்கள் தாம் நியமங்களுக்கு கட்டுப்பட்ட ஒழுக்க சீலர்களாகவே காட்டிக்கொள்கின்றனர். ஜானகிராமனின் நாவல்களில்  மனிதர்கள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.


அப்பு சிறு வயது முதல் காவேரிக்கரையில் உள்ள பவானி அம்மாளின் வேத பாடசாலையில் படித்துவிட்டு ஊருக்கு திரும்ப ஆயத்தமாவதில் இருந்து நாவல் ஆரம்பிக்கிறது. காவேரி ஆறு தான் அவனுக்கு எல்லாமாக இருக்கிறது. இந்து,  பவானி அம்மாளின் உறவுக்கார பெண் .சிறுவயதில் திருமணமாகி கணவனை இழந்த இந்து வேதபாடசாலைக்கு மீண்டும் வந்து பவானி அம்மாள் கூடவே இருக்கிறாள். இந்துவின் காதலை ஏற்றுக்கொள்ள அப்பு மறுக்கிறான். அது மரபை மீறும் செயல் என காரணம் சொல்கிறான்.

சொந்த ஊருக்கு வரும் அப்புவுக்கு தனது அம்மாவின் செய்கைகள் சந்தேகத்தை தருகின்றன. அலங்காரத்தம்மாள் தனது செயல் பிழை என உணர்ந்தும் அதிலிருந்து விடுபடமாட்டாமல் வாழ்ந்து வருகிறாள். வீட்டில் எல்லோருக்குமே விடயம் தெரிந்திருக்கிறது.  அலங்காரத்தம்மாள் அப்புவை வேதம் படிக்க வைத்து அவனை வணங்கி தனது பாவத்தைப் போக்க வேண்டும் என நினைக்கிறாள்.  இறுதியில் அப்புவும் அம்மா பிள்ளை தான் எனக்கூறி காசிக்கு போய் பாவம் கரைக்க  கிளம்புகிறாள். இதிலிருந்து அப்பு , இந்துவின் விடயம்  அலங்காரத்தம்மாளுக்கு தெரிந்திருந்தது என ஊகிக்கமுடியும். பவானியம்மாள் வெளிப்படையாக எதுவும் கூறாவிட்டாலும் அவளது நடவடிக்கைகள் அப்பு , இந்து சேர வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்றே எண்ண வைக்கிறது. இந்த நாவலின் இந்து, அலங்காரத்தம்மாள், பவானியம்மாள் என அல்லோரும் தாம் விரும்பியதை சாதிக்கிறார்கள். பவானியம்மாள் வேதபாடசாலை நிறுவி வேதம் கற்றுகொடுக்கும் தனது ஆசையை நிறைவேற்றுகிறார்.அலங்காரத்தம்மாளும் இந்துவும் சம்பிரதாயமாக மக்களால் பேணப்படும் மரபை துணிந்து மீறுபவர்களாக இருக்கின்றனர்.

  ஜானகிராமன் நாவல்களின்  பெண்கள் தனித்துவமானவர்கள். அவர்களிடம் ஒரு வசீகரம் ஒட்டியிருக்கும்.  மோகமுள் நாவலின் ஜமுனா போல. 

"சரஸ்வதி பூஜை அன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால் அன்று ஒரு நாளும் இல்லாத திரு நாளாக புத்தகத்தின் மேல் வருகிறது ஆசை " 

என்ற‌ நாவலின் முதல் வரியே நாவலின் சாரம்சம் போல இருக்கிறது.



Friday, 22 January 2016

(48) கிரௌஞ்சவதம் - வி.ஸ. காண்டேகர்

காண்டேகர் மராட்டிய எழுத்தாளர். அவரது  பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.  கிரௌஞ்ச வதமும்  கா. ஸ்ரீ. ஸ்ரீ யாலேயே அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காண்டேகரின் பல நூல்கள் முதன் முதலாக தமிழில் வெளியான பிறகே மூலமொழியில் வெளியாகியிருக்கின்றன. அந்த அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு காண்டேகர் பரிச்சயமானவர்.




முன் இணை யாகிய அன்றிலின்
மோகங்கொள் ஆணினைக் கொன்றனை
மன் நெடு நாள் இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!

வால்மீகியின் உத்தர ராமசரிதப் பாடல் இது. இப்பாடலே நாவலுக்கு ஆதாரமானது.

அப்பண்ணாவின் ஒரே புதல்வி சுலோசனா. நன்கு படித்தவள், திறமையானவள்.  அவளது இளவயது தோழன் திலீபன் எனப்படும் தினகரன். காந்திய ஈடுபாடு உள்ளவன். மக்களுக்காகவே சிந்தித்து வாழ்பவன். சுலோவின் கணவன் பகவந்தராவ் மகாராஜாவின் வைத்தியர். மகாராஜாவின் தயவில் படித்து அவரது அரண்மனை வீட்டிலேயே வாழ்கிறான். இவர்களுக்கிடையே பின்னப்பட்ட கதை கிரௌஞ்சவதம்.

காந்திய சிந்தனைகள் , காளிதாசரின் மேகதூதம் என்பவற்றையும் இடையிடையே வாசிக்க முடியும். இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரும் புத்தகம்.

Saturday, 2 January 2016

(47) ஒசாமஅசா - சோ

ஒசாமஅசா  - ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள். குமுதம் இதழில் தொடராக வந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகள். சோ சொல்வதை  Record  பண்ணி மணா தொகுத்திருக்கிறார். சோ இது தன்னுடைய சுயசரிதை இல்லை எனக் குறிப்பிடுகிறார். சோவுக்கு இந்தியாவின் முக்கிய நபர்கள் பலருடன் நல்ல நட்பு உள்ளது. முக்கிய நபர்களுடனான சோவின் அனுபவங்களே இத் தொகுப்பு. அவர்களில் காணப்படும் உயர்வான,  தான் பிரமிக்கும் குண இயல்புகளை குறிப்பிட்டுள்ளார். பகுதி 1 , 2 என இரு புத்தகங்கள் , மொத்தமாக கிட்டத்தட்ட 500 பக்கங்கள்.

எனக்கு ஈழம் தொடர்பான சோவின் கருத்துகளுடன் முரண்பாடுகள் உண்டு. ஆனால் அவரது திரைப்பட  நகைச்சுவைக‌ள் , எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். மூப்பனார், காமராஜர் , இந்திய பிரதமர் மோடி ,  M.G.R, சிவாஜி , கருணாநிதி உட்பட அரசியலில் முக்கியமானவர்கள் , சினிமாவில் முக்கியமானவர்கள் பலரைப்பற்றி சுவையான விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.M.G.R இன் அரசியல் தொடர்பாக அவரது துக்ளக் பத்திரிகையில் விமர்சனம் செய்து வந்தாலும் திரைப்படங்களில் அவருடன் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்ட சம்பவத்தை சுவையாகக் குறிப்பிடுகிறார். துக்ளக்கில் பணி புரிபவர்கள் பற்றிய அறிமுகம் சிரிப்பை வரவைக்கும். சோவின்  குடும்பத்தவர்கள், நண்பர்களுடனான மறக்க முடியாத சில அனுபவங்களும்  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அவரது அம்மா அவரை சோழன் பிரம்மஹத்தி என்ற பட்டப் பெயரில் அழைத்து, அதுவே பின்னர் சோழன் ஆகி  சோ  ஆகிவிட்டது என்று தனது பெயருக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.உயர்ந்த மனிதர்களுடனான நட்பு என்பது எல்லாருக்கும் எழிதில் கிடைப்பதில்லை. சோவுக்கு அது கிடைத்திருக்கிறது. இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இந்தியாவின் முக்கியஸ்தர் பலரைப்பற்றி மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியும்.

Wednesday, 30 December 2015

(46) சொல்லொணாப்பேறு - நரசய்யா

நரசய்யா ஒரிசாவில் பிறந்தவர். இந்திய கடற்படையில் வேலை செய்தவர். இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆலவாய் , கடலோடி என்பன அவரது சில முக்கிய நூல்கள் ஆகும்.


"சொல்லொணாப்பேறு" என்ற புத்தகமே நான் வாசித்த இவரது முதல் புத்தகம். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. 21 சிறுகதைகள் உள்ளன.  கதைகளுக்கு வரையப்பட்ட கோட்டோவியங்கள் கதையை மேலும் அழகாக்குகின்றன‌.  அவரது  சிறு வயது அனுபவங்கள் , வேலை அனுபவங்கள் என்பவற்றை இவரது சிறுகதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. காந்தி மீது அதிக ஈடுபாடு அவருக்கு இருக்க வேண்டும். அவரது கதைகளில் காந்திய சிந்தனைகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றன. ஒரு சில கதைகள் bore ஆக இருந்தாலும் ஏனையவை வாசித்து ருசிக்க வேண்டியவை. ஒளியின் வழியில், பற்றற்று , வாழ்க நீ எம்மான் , சொல்லொணாப்பேறு ஆகிய கதைகள் மிக சிறப்பானவை.

Tuesday, 22 December 2015

(45) பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன்

வண்ணதாசன் கதைகள் அழகியல் உடையவை. அவரது கதை மாந்தர்கள் கதைக்கும் வசனங்கள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும். அப்படிக் கதைப்பவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படியானவர்கள் ஒரு வேளை எங்காவது இருந்தால் அவர்களுடன் பழகக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அவசர உலகில் இப்படி ரசித்து ரசித்துக் கதைப்பவர்கள் , வாழ்பவர்கள் இருந்தால் அவர்கள் தான் உண்மையிலேயே அதிஷ்டசாலிகள்.

 வண்ணதாசன் சிறுகதை எங்கு தொடங்கும் , எங்கு முடியும் என்று என்னால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. ஏதோ தலைப்பு இருப்பதால் அங்கு தானே தொடங்க வேண்டும். திடீரென்று முடிந்தது போல இருக்கும். ஆனால் இந்த இடத்தில் கதை முடிவது தான் சரியாக இருக்கும் என்றும் தோன்றும்.

சிதம்பரம் சில ரகசியங்கள் , ஒரு ஞானி ஒரு முட்டாள், பெய்தலும் ஓய்தலும் , ஒரு முயல் குட்டி இரு தேநீர் க் கோப்பைகள், அணில் நிறம் அல்லது நிறங்கள், மிகவும் முக்கியமான பார்வையாளர்கள் , தத்தளிப்பு , கூடு விட்டு , ஒருவர் இன்னொருவர் , உப்புக் கரிக்கிற சிறகுகள் , உயரம் , சிநேகிதிகள் என கதைகள் உள்ளன.  

இப்புத்தகத்தில் உள்ள கதைகள் உயிரெழுத்து, விகடன் , கல்கி , புதிய பார்வை போன்ற இதழ்களில் எழுதியவை.  அனைத்துமே சிறப்பானவை.