Saturday, 18 April 2020

(85) வாழும் நல்லிணக்கம் - சபா நக்வி

தமிழில் முடவன் குட்டி முகம்மது அலி

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ரா ஒரு உரையில் ஒரு முறை சொல்லியதால் வாங்கினேன். ஆசிரியர் இந்தியாவில் சமய நல்லிணக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என ஆராய்ந்து எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார்(முஸ்லிம் பெண்)வழிபாடு, பூரி ஜெக நாதர் ரத யாத்திரையில் முஸ்லிம் கவிக்கு மரியாதை செலுத்த ரதம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றது போன்ற முக்கிய செய்திகள் பதிவாக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

(84) எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

உயிரினங்கள் மேல் ஈடுபாடுள்ள ராமும் அவர் மனைவி ஜானகியும் பெரும்பாலும் காடுகளில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது வீடும் காட்டுக்கு அருகில் தான் இருக்கிறது.பாம்பு, முதலை,சிறுத்தை கூடவே வாழ்ந்த அவர்களது வாழ்க்கை பிரமிப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தை ஜானகி தான் எழுதியுள்ளார். ராம் ஒரு அமெரிக்கர். ஆனால் இந்தியாவில் தான் சிறு வயது முதல் அவரது தாயாருடன் வாழ்ந்திருக்கின்றார். இந்தியக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்திருக்கின்றார். பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார். 


அவர்களுக்கு பாம்பு, முதலைகளைப் பற்றி எல்லாமே தெரிந்திருக்கின்றது. பாம்புகளை எவ்வாறு இனம் காண்பது, எந்த வகைப் பாம்புகள் எங்கு இருக்கும் என எல்லாமே விரிவாக பதிவு செய்துள்ளார். இருவருமே ஒரு சாகச வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள்.முள்ளம்பன்றியை , பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்திருக்கின்றார்கள் என்றால் சும்மாவா. அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மிருகங்களுடனும் பறவைகளுடனும் தான் மனிதர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. விலங்குகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் சுவைபடக் கூறியுள்ளார். ராம் இந்தியாவின் முதலைகள், பாம்புகளின் பாதுகாப்புக்காக நிறைய பாடுபட்டுள்ளார். இந்திய அரசின்  பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.எமக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகம் இருக்கின்றது என வியக்க வைத்த புத்தகம்

Sunday, 23 February 2020

(83)காந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் கட்டுரைகள், நாவல்கள் விரும்பி வாசித்தாலும் சிறுகதைகள் பெரிதாக வாசித்தது இல்லை. இப் புத்தகத்தில் 13 சிறுகதைகள் உள்ளன. முதல் கதை 'காந்தியோடு பேசுவேன்'. ஏற்கனவே வாசித்ததாக நினைவு. அருமையான கதை. பெண்கள் ஏன் காந்தியை விரும்பினார்கள் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ளலாம். காந்தியையும் புரிந்து கொள்ள உதவும்.காந்தியை நேரில் சென்று சந்தித்த கதை சொல்லியின் அம்மாவினூடாக காந்தி காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எழுதப்பட்ட கதை. காந்தி பற்றிய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை.
பாதியில் முடிந்த படம், அருவிக்கு தெரியும், ஷெர்லி அப்படித்தான் போன்ற கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.ராவின் சிறுகதைகள் தொடர்ந்து வாசிக்க  வேண்டும் என்ற ஆர்வத்தை இப் புத்தகம் தந்துள்ளது.

Monday, 30 December 2019

(82) மனம் கொத்திப் பறவை - சாரு நிவேதிதா

விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வணிக எழுத்தின் வாசகர்கள் சிலரையாவது அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றிருக்கும் இந்தக் கட்டுரைகள்.பல விடயங்களை கலந்து விகடன் வாசகர்களுக்கும் ஏற்றது போல் எழுதியுள்ளார். அவருக்குப் பிடித்த லத்தீன் அமெரிக்கா, உணவு , புத்தகங்கள், திரைப்படங்க
ள்,இசை , அரசியல் எல்லாமே உள்ளது.

(81) காடு - ஜெயமோகன்

ஜெயமோகனின் இணையத்தளம் நான் தவறாமல் ஒவ்வொரு நாளும் வாசிப்பேன். ஒவ்வொரு நாளும் முதன் முதலில் செல்லும் தளம் அது தான். புதிதாக வரும் அனைத்துப் பதிவுகளையும் வாசித்து விடுவேன். (வெண்முரசு தவிர. வெண்முரசு ஆரம்பித்த காலங்களில் ஒவ்வொரு நாளும் வாசித்தாலும் இடையில் வேலைப்பளு காரணமாக தொடர முடியாமல் அப்படியே விடுபட்டுவிட்டது. கட்டாயம் வாசிக்க வேண்டும்)
விஷ்ணுபுரம் தவிர்ந்த அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்க கடினமாக இருக்கும் என்ற தயக்கத்தினால் தான். காடு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாக இருந்தது. அடுத்த வருடம் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

Sunday, 12 May 2019

(81) குறுகிய வழி - ஆந்த்ரே ழீடு

மொழிபெயர்ப்பு - க. நா.சு

காவ்யா பதிப்பகம் தொகுத்த  க. நா.சு மொழிபெயர்ப்பு நாவல்கள் அடங்கிய தொகுதியில் மொத்தம் 6 நாவல்கள் உள்ளன. விலங்குப் பண்ணை நாவல் தந்த உற்சாகத்தில் அதே எழுத்தாளரின் மற்றொரு நாவலான 1984 வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் கால்ப்பகுதி கூட என்னால் வாசிக்க முடியவில்லை. நாவல் எனக்கு அந்நியமாகவே இருந்தது.அதனால் நிறுத்தி விட்டு ஆந்த்ரே ழீடுவின் 'குறுகிய வழி' நாவலை வாசித்தேன். 

ஜெரோமின் நிறைவேறாக் காதலை சொல்லும் நாவல் என்று மட்டும் தட்டையாக  சொல்ல முடியாது. ஜூலியட்டின் காதலும் கூட நிறைவேறவில்லை. ஜெரோமும் அலிஸாவும் காதலிக்கிறார்கள். ஆனால் அலிஸா ஜெரோமைத் திருமணம் செய்து கொள்வதை விட  மதத்தை தீவிரமாக விரும்புகிறாள். உண்மையான மகிழ்ச்சி என்பது மதத்தில் சொன்னவற்றை பின்பற்றுவதே என எண்ணும் அலிஸா தனது தங்கை ஜெரோமை விரும்புவது தெரிந்து தான் தனது காதலை தியாகம் செய்ய விரும்புகிறாள். ஆனால் தங்கை ஜூலியட் வேறு ஒருவரைத் திருமணம் செய்து தனது காதலைத் தியாகம் செய்கிறாள். நாவலின் இறுதிப் பகுதி அலிஸாவின் நாட்குறிப்புகளினூடாக‌ சொல்லப்படுகிறது.அலிஸா இறந்து 10 வருடங்களின் பின் ஜெரோமும் ஜூலியட்டும் சந்திப்பதில் நாவல் நிறைவடைகிறது. அப்போது ஜூலியட்டுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்து இருக்கிறது. பெண் குழந்தை. பெயர் அலிஸா.

Saturday, 11 May 2019

(80) விலங்குப் பண்ணை- George Orwell

தமிழ் மொழிபெயர்ப்பு - க. நா.சு

புரட்சியைக்(ரஷ்ய‌) கிண்டல் செய்து  எழுதப்பட்ட நாவல். க. நா.சு மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது. மூல நாவலை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது கிடைக்காத இன்பம் க. நா.சு வின் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.பல வசனங்களைத் தமிழில் ரசித்து வாசித்து விட்டு, பின் ஆங்கிலத்தில் அவ்வசனங்களை வாசிக்கும் போது  தமிழ் மொழிபெயர்ப்பின் தரத்தை உணர முடிகிறது. வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், நாவலை உயிர்ப்புடன் தமிழில் தந்திருக்கும் க. நா.சு உண்மையிலேயே தமிழுக்கு கிடைத்த ஒரு கொடை தான். காவ்யா பதிப்பகம் அவரது படைப்புகளைத் தொகுத்துள்ளது. அவரது விமர்சனங்கள் மூலமே நான் பல நாவல்களை அறிந்திருக்கிறேன்.


திரு. ஜோன்ஸ் இன் பண்ணையிலேயே புரட்சி நடக்கிறது.  கிழ‌ட்டுத்தளபதி என மற்ற மிருகங்களால் அழைக்கப்படும் பன்றி ஒரு நாள் புரட்சி பற்றி தான் கண்ட கனவை மற்ற விலங்குகளுக்கு விளக்கிவிட்டு சிறிது நாட்களில் இறந்து விடுகிறது. புரட்சி எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே ஒரு நாள் புரட்சியும் நடந்து விடுகிறது. நெப்போலியன், ஸ்னோபால் ஆகிய இரு பன்றியும் தான் ஏனைய விலங்குகளை வழி நடத்துகிறது.  குதிரைகளான பாக்சர், க்ளோவர், கழுதை பெஞ்சமின், Mollie என்ற தற்பெருமையுடைய குதிரை, ஸ்குவீலர் என்ற பேச்சாற்றல் மிக்க பன்றி(இது கறுப்பையே வெள்ளை என்று தன் பேச்சால் நிரூபித்து விடும்) மோசஸ் என்ற காகம் , கோழிகள் , பூனைகள் என பண்ணையின் விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. 


புரட்சியின் பின் ஏழு விதிகளை உருவாக்கும் புரட்சிக்கு தலைமை வகிக்கும் பன்றி நெப்போலியன் இறுதியில் ஒவ்வொன்றாக விதிகளை மீறி வருவதை அழகாக நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'எல்லா மிருகங்களும் சமம்' என்ற விதியை ' எல்லா மிருகங்களும் சமனானவை ஆனால் சில மிருகங்கள் வேறு சில மிருகங்களை விட அதிக சமனானவை' என மாற்றிவிட்டது. ஸ்னோபால் பன்றிக்கு துரோகி பட்டம் கொடுத்து பண்ணையை விட்டுத் துரத்திவிடும் நெப்போலியன் பின்னர் நடக்கும் அநீதி முழுவதையும் ஸ்னோபால் தலையிலேயே கட்டிவிட்டுவிடும். இறுதியில் புரட்சியால் எந்த பலனும் கிடைப்பதில்லை. முன்னர் இருந்த நிலையை விட கீழ் நிலைக்கே உழைப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்,புரட்சியாளர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வசனம் பேசி, நியாயப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதை நாவல் சொல்கிறது.அந்தப் பண்ணையில் நடப்பவற்றை இன்று கூட நாம் அரசியலில், நமது தொழில் புரியும் இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.