Sunday 10 April 2016

(52) திருவரங்கன் உலா

  சுல்தானிய படையெடுப்புக் காலத்தில், அவர்களிடம் இருந்து காப்பாற்ற  ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரை வேறு இடத்திற்கு மறைத்து எடுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 40 வருடங்கள் அஞ்ஞாத வாசம் இருந்த ரங்கநாதரின் உலா பற்றி  ஸ்ரீவேணுகோபாலன்  எழுதிய வரலாற்று நாவலே "திருவரங்கன் உலா".  


முகம்மது பின் துக்ளக்  என பின்னாளில் பெயர் பெற்ற உலுக்கான் , டில்லி சுல்த்தானான கியாசுத்தீன் துக்ளக்கின் மகன். ஸ்ரீரங்கம் கோயிலைக் கொள்ளையிட முற்பட்டான். இக்கொள்ளையில் இருந்து அரங்கன் சிலை , நகைகளைக் காக்க ஒரு பகுதி மக்கள் அரங்கனைத் தம்முடன் எடுத்து செல்கின்றனர். ஒரு பகுதி மக்கள் கோயில் மதிலை அரனாக வைத்து சண்டையிடுகின்றனர். மூலவர் சிலைக்கு முன்னால் கல்லால் தூண் எழுப்பி மறைத்துவிடுகின்றனர்.அச்சண்டை தோல்வியில் முடிகிறது.  


ஸ்ரீரங்கத்தில் ஒரு படையை நிறுத்தி அரங்க‌ன் சிலையைத்தேடுமாறு கூறி சுல்தானியர் படை மதுரை நோக்கி செல்கிறது. மதுரையை சுல்தானியர் முற்றுகை இட்டதால் அழகர் கோயிலில் இருந்த அரங்கன் சிலைக்கு பாதிப்பு என எண்ணி அச்சிலையை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தென் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கிருந்து சேர நாடு சென்று கோழிக்கோடு (Calicut)  வழியாக மேல்க் கோட்டை , சத்தியமங்கலம் செல்கின்றனர்.  இப் பயணத்தின் போது அரங்கனின் நகைககள் களவாடப்படுகின்றது. அரங்கன் மேல் கொண்ட அன்பால்,  தமது குடும்பங்களைக்  பிரிந்து அரங்கனுடன் மக்கள் செல்கின்றனர். எப்படியாவது அரங்கனை மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வரவேண்டும் எனப் பாடுபடுகின்றனர்.


இக் கதையில் முக்கிய கதாபாத்திரமாக குலசேகரன் இருக்கிறான். அரங்கனை சுல்தானியர் கண்ணில் படாமல் எடுத்துச்செல்வதிலும் சுல்தானியர்களுக்கு எதிராக சண்டை செய்வதிலும் முன் நிற்கிறான். இறுதியில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன் துணையுடன் நடந்த சுல்தானியர்களுக்கு எதிரான போரில் இறந்து விடுகிறான்.

முதலில் ஒய்சாள மன்னன் வீர வல்லாளன்,  சண்டையால் இழப்பு மட்டுமே வரும் என எண்ணி சுல்தானியர்களுக்கு எதிராகச் சண்டையிடாது கப்பம் கட்டி ஆட்சி செய்தான்.  பின் சுல்தானியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டான்.  முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டான். இதன் பிறகு வல்லாளனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். ( இபன் பதூதா தனது நூலில் இச் செய்தியைக்  குறிப்பிட்டுளார்)   மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. வீர வல்லாளன் இறப்பின் பின் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு வரலாம் என்ற‌ நம்பிக்கை போய்விடுகிறது.
சுல்த்தானியர் அரங்கன் சிலையைத் தேடி  அலைந்தமைக்கு இதற்கு முன்னைய சுல்தானிய படையெடுப்பில் இச்சிலை கொள்ளையடிக்கப்பட்டமை ஒரு காரணமாக இருந்தது. இதனுடன் தொடர்புடையதே துலுக்க நாச்சியார் கதை.


சுல்தான் அலாவுதீன் கில்சி டில்லியில் ஆட்சி செய்ய தொடங்கியதும் தனது தளபதி மாலிக் காபூரை அழைத்து தெற்கு நாடுகளுக்கு படையெடுப்பை மேற்கொள்ளுமாறு சொன்னார். மாலக்காபூர் படை கார்த்திகை மாதம் டில்லியில் இருந்து புறப்பட்டு சித்திரை மாதம் வீரதாவளப் பட்டினத்தை அடைந்தது. பாண்டிய அரசர் சண்டை போடாமல் ஓடிச்செல்ல அவரைத்துரத்தி சென்ற படைகள் வழியில் அகப்பட்ட நகரங்களைக் கொள்ளை அடித்து சென்றனர். காஞ்சிபுரம், கண்ணனூர் , ஸ்ரீரங்கம் என்பன சூறையாடப்பட்டன. கடைசியில் மதுரை சென்ற போது அங்கு இருந்த பாண்டிய  மன்னர் விக்கிரம பாண்டியர் தடுத்து நிறுத்திவிட்டார். திரும்பும் போது  சூறையாடப்பட்ட தென்னாட்டின் திரவியங்கள்  எல்லாம் எடுத்து செல்லப்பட்டன. பொருட்களை அலாவுத்தீன் டில்லி பிரபுக்களுக்கு பிரித்து கொடுத்தார்.  திருவரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரங்கன் சிலை அப்துல்லா உசேன் பாதுஷா என்பவரிடம் செல்கிறது.

அவரது பெண் சுரதாணி  (கிழக்கிந்திய கம்பனி காலத்தில் செஞ்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் எழுதிய கர் நாடக ராஜாக்களின் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலில் இப்பெயர் காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ) கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பார்வையிட , அங்கிருந்த அரங்கன் சிலை அவளை வசீகரித்துக் கொள்கிறது. ஆண்டாளை ஆட்கொண்டவன் அல்லவா? . சுரதாணி அச்சிலையை எடுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். மறுபுறம் அரங்கன் மேல் மாறாத காதல் கொண்ட மக்கள் கொள்ளையிட்ட படையின் பின்னாலேயே சென்று அரங்கன் சிலை எங்கு உள்ளது என அறிகின்றனர். பாதுஷா முன்னால்  'ஜக்கிந்தி' நடனம் ஆடி அவரை மகிழ்விக்கின்றனர்.  பல வெகுமதிகளைக் கொடுத்த பாதுஷாவிடம் அதை மறுத்து அரங்கனின் சிலையைத்தரும்படி கேட்கின்றனர். அரங்கனின் சிலையை சுரதாணிக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு திருவரங்கம் வருகின்றனர். 


அரங்கன் சிலை இ
ல்லாததைக்கண்டு சுரதாணி துடித்துப் போகிறாள். ஒரு விக்கிரகத்திற்காக மகள் துடிப்பதைப் பார்த்து பாதுஷா ஆச்சரியப்படுகிறார். மகளுக்காக ஒரு சிறுபடையை அனுப்பி அவ்விக்கிரகத்தை மீண்டும் கொண்டு வருமாறு அனுப்புகிறார். சுரதாணியும் அப்படையுடன்திருவரங்கம் வருகிறாள். டில்லிப் டை பின் தொடர்ந்து வருவதை அறிந்த மக்கள் அரங்கன் விக்கிரகத்துடன் ஸ்ரீரங்கம் செல்லாது வேறு வழியில் சென்றனர். திருவரங்கத்தில் விக்கிரகத்தை காணாத சுரதாணி அங்கேயே மரணம் அடைகிறாள். சுரதாணி தான்  துலுக்க நாச்சியார் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் வட கீழ் மூலையில் சுரதாணியின் உருவம் சித்திரமாக உள்ளது. தினமும் காலையில் கோதுமை ரொட்டி , மதுரப்பருப்பும் படைக்கும் வழக்கம் இன்று வரை  தொடர்கிறது.


அரங்கன் மேல் பக்தர்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்று கதையை வாசிக்கும் போதே  புல்லரிக்கும். மூன்று கொடவர்கள் அரங்கன் சிலையுடன் சத்தியமங்கலத்தில் இருந்து மேல்க் கோட்டை செல்வதுடன் கதை முடிகிறது. இச்சிலை பின் திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  இது தொடர்பான கதையை இதன் இரண்டாம் பாகமான 'மதுரா விஜயம்' என்ற நூலில் வாசிக்க முடியும் என நினைக்கிறேன். அரங்கனை கண்ணார தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த நூல் ஏற்படுத்திவிட்டது.


 







No comments:

Post a Comment