Friday 21 February 2014

(4) தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி


தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த நாவல்.  இந்துமதியின் எழுத்துக்கள் பெரிதாக நான் வாசித்தது இல்லை. அவரது புத்தகங்களில் சிறந்தது இது தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 நடுத்தர குடும்ப கதை. கதையின் நாயகன் விஸ்வம்,  பெரிய மேற்படிப்பு கனவுகளுடன் வாழ்ந்து கடைசியில் குடும்பத்தை காப்பாற்ற படிப்பை நிறுதிவிட்டு சாதாரண வேலைக்கு செல்லும் அண்ணன் பரசு, அண்ணி ருக்மணி முக்கிய பாத்திரங்கள். ருக்மணியை அனைத்து ஆண்களுக்கும் பிடித்த கதாபாத்திரமாகவே உருவாக்கியிருக்கிறார், அதாவது இன்முகத்துடன் கணவனின் குடும்பத்தை கவனிக்கும் ருக்மணி . அத்துடன் ருக்மணிக்கு இலக்கிய ஆர்வமும் இருக்கிறது.

அப்பாவின் வற்புறுத்தலால் நேர்முகத்தேர்விற்கு  வந்து காத்திருக்கும் விஸ்வம் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. அண்ணனுக்கு பெண் பார்க்க செல்வது, ஜமுனாவுக்கும் விஸ்வத்திற்கும் இடையிலான காதல், அம்மாவுக்கு பின் வீட்டை பொறுப்பாக பார்க்கும் அண்ணி ருக்மணி மற்றும்  பரசு, விஸ்வம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை இயலாமையுடன் சொல்லும் தந்தை என கதை வேகமாக நகருகிறது.
குடும்ப நிலைகாரணமாக இலட்சியம், கனவுகளை தொலைத்து, கிடைத்த வேலைக்கு தம்மை பழக்கி கொண்டு வாழ்ந்து வரும் பலர் தம்மை  விஸ்வம், பரசு பாத்திரத்திற்கு சுலபமாக பொருத்தி பார்க்கக்கூடியதாக இருப்பதால் தான் இன்று வரை பேசப்படும் நாவலாக இருக்கிறது.

No comments:

Post a Comment