Friday, 3 August 2012

புத்தகங்கள்

வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் - 2

1.  கோடுகள் இல்லாத வரைபடம்- எஸ்.ராமகிருஷ்ணன்  
   
    பெயரே ஒரு வித கவர்ச்சியை தர எஸ்.ரா வின் புத்தகம் என்பதால் சந்தேகம் இல்லாமல் வாங்கினேன்.பண்டைய இந்தியாவுக்கு வந்த யாத்ரீகர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.பாஹியான், வாஸ்கோட காமா,  மார்க்கோ போலோ,  இபின் பதூதா என பல பயணிகளைப் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 

2.  கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது-
அ.முத்துலிங்கம்

   இந்த புத்தகத்தில் அம்பை, அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ரா , சுஜாதா, அ.மு என இருபது  எழுத்தாளர்கள் தமக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

3.  தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - ரொபின் ஷர்மா
     
  இது   The Monk Who Sold His Ferrari  என் புத்தகத்தின் தமிழ் வடிவம்.சுயமுன்னேற்ற வகை புத்தகம். என்னடா இது வாழ்க்கை என்று எண்ணிய ஒரு பொழுதில் கடை சென்று வாங்கியது.

4. நிகழ்தல் - ஜெயமோகன்

அனுபவக் கட்டுரைகள். 

இப்பவெல்லாம் ஜெயமோகன் வலைப்பதிவு படிப்பது என் அன்றாடக் கடமைகளில் ஒன்று .

5. காண் என்றது இயற்கை - எஸ்.ராமகிருஷ்ணன்

இயற்கையை புத்தகத்தினூடாக அறியலாம், அனுபவிக்கலாம். இயற்கையும் இந்த புத்தகமும் நிறைய கற்று தருகின்றன.எஸ்.ராவின் தேசாந்திரி படிக்க வேண்டும் என்று தேடாத கடை இல்லை.


6. பனிமலை - எண்டமூரி வீரேந்திரநாத்

மூன்று பெண்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்கள் அதை அவர்கள் எதிர் கொண்ட விதம் என நாவல் செல்கிறது.இவரது புத்தகங்கள் அநேகமானவை எனக்கு பிடித்தவை.


7. என் இனிய இயந்திரா - சுஜாதா

2021 இல் நடப்பது போன்ற கற்பனைக் கதை. இதை தான் எந்திரனாக எடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எந்திரனுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கண்டுபிடிக்க முடியாது. என் இனிய இயந்திரா வின் அடுத்த பாகம் மீண்டும் ஜீனோ.இரண்டுமே நன்றாக இருக்கும். எல்லோரும் ஜீனோவின் விசிறியாவது உறுதி.


8. மர்மங்ளின் பரம பிதா - மருதன்

சுபாஷ் சந்திர போஸ் பற்றி அறியும் ஆவலில் வாங்கினேன். வாசித்த பின் நேதாஜியை ரொம்ப பிடித்து விட்டது. மேலும் அறிய அவரைப் பற்றிய வேறு புத்தகங்களும் வாங்கி வாசித்தேன். 


9. கிராமங்களில் உலவும் கால்கள் - கழனியூரான்

நாட்டாரியல் புத்தகங்களில் உள்ள ஆர்வம் காரணமாக வாங்கியது.பழமை , பண்பாடு பற்றி வாசிக்க நன்றாகவே உள்ளது.


10.  பூமியின் பாதி வயது -  அ.முத்துலிங்கம்

புத்தகம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு super. பார்த்தவை, படித்தவை, கேட்டவை, அனுபவித்தவை, சிந்தித்தவை,கட்டியவை, மொழிபெயர்த்தவை, இழந்தவை போன்ற‌ தலைப்புகளில்.

   

  
 

Wednesday, 31 August 2011

புத்தகங்கள்

வாசித்த சில புத்தகங்களின் பட்டியல் - 1

1. துங்கபத்திரை - பாவண்ணன்
அனுபவங்களை அழகுற எழுதியுள்ளார்.
இதில் ஜோக் அருவி பற்றி வாசித்த பின் வாழ் நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

2. ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள் - கோபிநாத்
ஒரு தன்னம்பிக்கை நூலாக கொள்ளலாம்.
கோபிநாத் -'நீயா நானா' நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகமானவர். நான் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி என் இதை மட்டுமே சொல்லலாம்.

3. இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் - அரவக்கோன்
ராஜஸ்தான் , காஷ்மீர ஓவியங்கள் என‌ ஓவியம் பற்றி ஒரு சிறந்த விளக்கம் கிடைக்கும்
இந்தியாவின் பழமையான ஓவியங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வாங்கினேன்.

4. தொடரும் பயணம் - வெங்கட் சாமிநாதன்

5. நகரம் - சுஜாதா
சிறுகதைத் தொகுப்பு. இத் தொகுப்பில் உள்ள நகரம் எனும் சிறுகதை சிறப்பானது.
ஒரு துளி கண்ணீரை வரவழைக்காமல் போகாது.

சுஜாதா - எனது வாசிப்பை விரிவுபடுத்தியது இவரது எழுத்துக்களே.
அவரது ' கற்றதும் பெற்றதும்' வாசித்ததன் மூலம் நான் பல எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன்.

6. கிராமத்து தெருக்களின் வழியே - ந. முருகேசபாண்டியன்
அழிந்து வரும் தமிழ் நில பண்பாடு பற்றிய ஒரு ஆவணம்.

7. அக்கினிச் சிறகுகள் - அப்துல் கலாம்

8. கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா
நாட்டார் பாடல் எல்லாம் இடையிடையே வரும். இந்த கதை படமாக எடுக்கப்பட்டுள்ளது.

9. நலம் - ஜெயமோகன்
உடல், மனம், மருத்துவம் பற்றிய கட்டுரைகள் , கடிதங்கள் உள்ளடங்கியது.
இவரது நாவல்கள் (ஏழாம் உலகம்,..) வாசிக்கும் முயற்சியில் எனக்கு கிடைத்தது தோல்வியே . புரியவே இல்லை.அ.முத்துலிங்கம் இவரது 'ஊமைச்செந்நாய்' உலக இலக்கிய தரம் என புகழ்ந்ததால் வாசிக்க முயன்றேன்.இது தான் உலக இலக்கியம் என்றால் அதைப்பற்றி தெரியாமல் இருப்பதே மேல் என்று தோன்றியது.இவரது இணையத்தளத்தை தொடர்ந்து வாசிப்பேன். அறம் சிறுகதைகள் பிடிக்கும்.

10. மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - கழனியூரான்
111 நாட்டார் கதைகள் உள்ளடங்கியது.

11. தீராக்காதலி - சாரு நிவேதிதா
தியாக ராஜ பாகவதர், கிட்டப்பா, சுந்தராம்பாள் போன்ற தமிழ் சினிமா முன்னோடிகளை பற்றி விரிவான
அறிமுகம் தருகிறது.



சிறிது வெளிச்சம் - எஸ். ராமகிருஷ்ணன்



ஆனந்த விகடனில் தொடராக வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆர்வக்கோளாறில் இரு நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். ஆனால் மறுபடியும்
நிதானமாக ரசித்து வாசிக்க வேண்டும்.

Sunday, 28 August 2011

யாமம்



ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராவின் படைப்புகளில் எப்போதுமே எனக்கு மிகுந்த ஆர்வமும் பிரமிப்பும் இருப்பதுண்டு.அண்மையில் அவரது 'யாமம்' நாவலை வாசிக்க தொடங்கினேன். நாவலின் ஆரம்ப பகுதி வாசிப்பதற்கு ஆர்வம் தராததாக இருந்த போதும், எப்படியாயினும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற கொள்கையிருந்ததால் ஒவ்வொரு நாளும் நாலைந்து பக்கமாவது வாசிக்க வேண்டும் என தீர்மானித்தேன். ஆனால் இரு நாட்களிலேயே நாவல் என்னை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. நேரம் செல்வதே தெரியாமல் வாசித்து முடித்த போது நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைத்த திருப்தி கிடைத்தது.


இந்த நாவலின் கதைப்பாத்திரங்களான அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ண‌ப்ப கரையாளர், பண்டாரம் போன்றவர்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாத போதும் இவர்களில் ஏதோ ஒரு வகையில் யாமம் எனும் அத்தர் தொடர்புபட்டிருக்கிறது. யாமம் எனும் அற்புத மணம் கொண்ட அத்தர் தயாரிக்கும் கலையை கைவரப்பெற்ற குடும்பத்தினதும்,அந்த யாமத்தினால் ஆட்கொள்ளப்பட்ட‌ வெவ்வேறுபட்ட மனிதர்களதும் கதையினூடாக‌
கடற்பாக்கம் ஒன்று படிப்படியாக மதராபட்டணமாக உருவான கதையே யாமம் நாவலினூடாக சொல்லப்பட்டுள்ளது.



Eat Pray Love


இயந்திரத்தனமான வாழ்க்கை அலுப்பபு தருவதாக உணரும் பெண் அதிலிருந்து விடுபட‌ உலகை சுற்றி பார்க்கும் கதை. படத்தில் பாலி, இத்தாலி,இந்தியா போன்ற நகரங்களை பார்க்க முடிகிறது. அமைதியான பொழுதில் ரசித்து பார்க்க வேண்டிய படம்.

Thursday, 11 August 2011

தமிழகத் தடங்கள்



ஆசிரியர்: மணா
தமிழ் நாட்டின் நாம் மறந்து விட்ட அல்லது மறக்க கூடாத முக்கிய மனிதர்கள், இடங்கள் அவற்றுடன் தொடர்புடைய சம்பவங்கள் பற்றிய அறிமுகம் இப் புத்தகம் ஊடாக கிடைக்கிறது.

அற்புத உலகில் ஆலிஸ் (Alice in Wonderland )


குழந்தை மனதுடன் பார்த்து ரசிக்க ஏற்ற படம்.