Wednesday, 23 April 2014

7. குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

இவரது " நா.பாவின் இலக்கியக்கதைகள் " எனும் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். அது போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து முடிக்கும் பக்குவமும் எனக்கு இல்லை என்பதோடு  அவை தொடர்ச்சியான வாசிப்புக்கு உரியவையும் இல்லை என்பதால் சில கதைகளை மாத்திரம் இதுவரை படித்துள்ளேன். அது தவிர  நா.பார்த்தசாரதியின் புத்தகங்களை வாசித்தது இல்லை. அண்மையில் பலர் 'குறிஞ்சி மலர்' மற்றும் 'பொன்விலங்கு' பற்றி குறிப்பிட்டதால், சரி வாசித்து தான் பார்ப்போம் என்று எடுத்த புத்தகம் தான் குறிஞ்சி மலர்.

நா.பா ஆரம்பத்திலேயே திலகவதியார் - கலிப்பகையார் கதையின் ஒரு வடிவம் தான் கதை என்று  சொல்லிவிடுகிறார்.
பூரணியின் தந்தை  தமிழில் புலமை உள்ளவர். கல்லூரி செல்லாவிட்டாலும் பூரணி தந்தையிடம் இருந்து தமிழ் அறிவை பெற்றுக்கொள்கிறாள். சிறுவயதிலேயே தாயை இழந்த பூரணி  பின் தந்தையையும் இழந்துவிட திர நாவுக்கரசு, சம்பந்தன்,மங்கையர்க்கரசி என்னும் மூன்று இளைய சகோதரர்களை பார்க்கவேண்டிய பொறுப்பும் வந்துவிடுகிறது. பண பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழவேண்டும் என்ற இலட்சியம் உள்ளவள். மங்களேஸ்வரி என்ற பெண்மணியின் நட்பு கிடைக்கிறது, அதன் மூலம் மங்கையர் கழகத்தில் தமிழ் வகுப்பு எடுக்கும் வேலையும் கிடைக்கிற‌து. தந்தையின் புத்தக மீள் பிர‌சுர  விடயமாக அரவிந்தன் என்பவனது நட்பு கிடைக்கிறது. அது பின் காதலாகிறது.

அரவிந்தன் இலட்சியங்கள் நிறைந்தவன். திருக்குறள் மீது பெரு விருப்பு உள்ளவன்.  ஏழைகள் மீது அக்கறை உள்ளவன்.அநாதையான அவன் மீனாட்சிசுந்தரம் என்பவரது பதிப்பகத்தில் வேலை பார்க்கிறான். மீனாட்சிசுந்தரமும் அரவிந்தன் மேல் அன்புள்ளவர். அரவிந்தனுக்கு முருகானந்தம் என்னும் நண்பன் உள்ளான். பூரணி, அரவிந்தன் இருவருமே சமூக அக்கறை உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு நிலவுகிறது. பூரணி சிறந்த பேச்சாளராகி இலங்கை, கல்கத்தா சென்று சொற்பொழிவாற்றுகிறாள். அவளது பேச்சாற்றலை வைத்து நிதி திரட்டி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறார்கள்.அரசியலும் வருகிறது. பர்மாக்காரர் வில்லனாக வருகிறார். நா.பா அரசியலில் உள்ள அழுக்குகளையும் ஒரளவு எழுதியுள்ளர். திலகவதியார் - கலிப்பகையார் கதை என்பதால் முடிவு ம் அதே போல் தான். திலகவதிக்கு  கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க முடிவாகும். ஆனால் திருமணத்திற்கு முன்பே நாட்டுக்காக போரில் ஈடுபட்ட கலிப்பகையார் இறந்து விடுவார். திலகவதியார் திருமணம் செய்யாமல் சேவையில் தனது வாழ்வை அர்ப்பணிப்பார். பூரணியும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

 இதில் நான் ரசித்த இடங்கள் பல உண்டு. இலங்கை பற்றிவரும் இடங்கள். இடங்கள் எல்லாம் சரியாகவே கொடுத்திருப்பார். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காட்டியது போல சம்பந்தம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை. எந்த இடத்தில் இருந்து எங்கு போவது போன்ற ஒழுங்குகள், எப்படி பிரயாணம் செய்வது போன்றவை எல்லாம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நா.பா இலங்கை வந்திருப்பார் போல. அது போல பூரணி திருப்பரங்குன்றத்தில் ரசிக்கும் நீல நிறத்தில் ஒளிரும் "ஓம்" அப்படியே மனதில் பதிந்து விட்டது. ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.

இன்றைய காலத்திற்கு இந்த கதை பல இடங்களில் எரிச்சலை வரவைக்க வாய்ப்புள்ளது. தியாகத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் பொருந்தும். இருந்த போதும் பள்ளிக்கூட நாட்களில் வாசிப்பதற்கு  ஒரு சிறந்த நாவல் என்பதே என் கருத்து.  'பொன்விலங்கு' வாசிக்க வேண்டும்.


Sunday, 20 April 2014

6. ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 - சத்யஜித் ரே

 ஃபெலுடாவின் சாகசங்கள் - 5 -   சத்யஜித் ரே
( கேங்டாக்கில் வந்த கஷ்டம் )

சத்யஜித் ரே திரையுலகில் பெயர் போனவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா போன்ற திரைப்படங்கள் போதும் அவரது திறைமயை பேச. அதே போல அவர் சிறந்த எழுத்தாளர் என்றும் படித்து இருக்கிறேன். பெலுடாவின் சாகசங்கள்  என்ற தொடரில் ஐந்தாவதாக வெளியான "கேங்டாக்கில் வந்த கஷ்டம்"  என்ற புத்தகத்தை அண்மையில் படித்தேன். வங்காள மொழியில் வெளியான இக்கதையை வீ.பா.கணேசன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.

துப்பறியும் கதை என்பது பெயரை பார்த்தாலே தெரிந்துவிடும். கோடை விடுமுறையை களிப்பதற்காக தபேஷும் ஃபெலுடாவும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்  செல்கிறார்கள். அங்கே நடைபெற்ற விபத்து ஒன்றை ஃபெலுடா துப்பறிகிறார். விபத்தில் இறந்த ஷெல்வான்கர் என்பவர் யமன்தக் எனும் ஒன்பது தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய பௌத்த சமய கடவுளின் சிலை வத்திருக்கிறார். விபத்துடன் அச்சிலையும் காணாமல் போய்விடுகிறது. அது விபத்தா அல்லது கொலையா? அதன் பின்னணி என்ன என ஃபெலுடா  துப்பறிகிறார். கதை விறுவிறுப்பாக செல்கிறது.



Thursday, 17 April 2014

5. ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன்

பாவண்ணனின் எழுத்துக்களை நான் விரும்பி படிப்பதுண்டு. துங்கபத்திரை நதியும் ஜோக் அருவியும் அவரது எழுத்துகளில் ஒன்றிப்போயிருக்கும். வாழ் நாளில் ஒரு தடவை ஜோக் அருவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இவரது "துங்கபத்திரை" என்ற புத்தகம் வாசித்ததில் இருந்து தொடங்கிவிட்டது. அதற்கு பின்  காகா கலேல்கர் எழுதிய "ஜீவன் லீலா" என்ற புத்தகத்தை ஜோக் பற்றி அறிவதற்காகவே வாசித்தேன். கும்கி படத்தில் ஜோக் அருவியின்  அழகை பார்த்த பின் அந்த ஆசை இன்னும் கூடிவிட்டது.

அண்மையில் பாவண்ணன் எழுதிய "ஆழத்தை அறியும் பயணம்" வாசித்தேன். தனது சில அனுபவங்களை  எழுதி அதனுடன் பொருந்தும் சிறுகதைகளை விபரித்து உள்ளார். கிட்டதட்ட எஸ்.ராமகிருஸ்ணனின் "கதாவிலாசம் " போல.
இந்திய தமிழ் சிறுகதைகள், இலங்கை தமிழ் சிறுகதைகள் மற்றும் வேற்று மொழிக்கதைகள் உட்பட மொத்தமாக 43 கதைகள். 43 எழுத்தாளர்களை ஓரளவு புரிந்து கொண்ட திருப்தி கிடைக்கிறது. வேற்று மொழிக் கதைகளில் தாகூர், ஜயதேவன், கே.ஏ.அப்பாஸ், சரத்சந்தர்,தூமகேது, வில்லியம் பாக்னர் போன்ற 10 எழுத்தாளர்களின் சிறுகதையை குறிப்பிட்டுள்ளார்.வாசிக்கும் போதே அவர்களது சிறுகதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. முக்கியமாக ஐல்ஸ் ஐக்கிங்கரின்  'ரகசியக் கடிதம்' என்ற கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த 43 கதைகளில் அ.முத்துலிங்கத்தின் "அக்கா", தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" தவிர வேறு எதையும் நான் வாசித்ததில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், கல்கி,  நா. பார்த்தசாரதி  போன்றவர்களை மட்டுமே நான் ஓரளவு படித்துள்ளேன். இன்னும் படிக்க நிறைய சிற‌ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்  என்பதை இந்த புத்தகம் ஞாபகம் ஊட்டி சென்றுள்ளது.